அறிவிலித்தனம், அரசியலுக்கே தேவை இல்லை, கால்டுவெல் புத்திரர்கள்.. விஜய்யை திடீரென சாடிய பாஜக எச்.ராஜா
சிவகங்கை: ஆளுநர் பதவியே தேவை இல்லை என்கிற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை அரசியலுக்கே தேவை இல்லை என மக்கள் முடிவெடுத்து சொல்லிவிட்டால் என்ன செய்வார்? அரசியல் சாசனத்தைப் படித்துப் பார்க்க வேண்டும்; திராவிடம் குறித்து விஜய் பேசுவது என்பது கால்டுவெல்லைப் பின்பற்றுகிறவர்களுடன் சேர்ந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என்று தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, பிரிவினைவாதம் பேசக் கூடிய திராவிடர் இனத்தைச் சேர்ந்தவர் நடிகர் விஜய். இதனால் பாஜகவுக்கு எந்த பலவீனமும் இல்லை. திராவிடர் இனத்தைச் சேர்ந்தவர் ஓட்டைத்தான் விஜய் பிரிப்பார். அது திமுகவுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும். விஜய் இன்னமும் ஒன்றிய அரசு, பெரியார், திராவிடம் என பேச வேண்டும். அது எங்களுக்கு நல்லது என கூறியிருந்தார்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் பாஜகவுக்குதான் ஆதாயம் என்கிற அடிப்படையில் எச்.ராஜா பேசியிருந்தது பல்வேறு கேள்விகள் மற்றும் விவாதங்களை எழுப்பி இருந்தது.
அரசியலுக்கே தேவை இல்லை: இந்த நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியதாவது: ஆளுநர் பதவியே தேவை இல்லை என்கிறாரா விஜய்? அரசியலுக்கு விஜய்யே தேவை இல்லை என மக்கள் முடிவெடுத்து சொல்லிவிட்டால் என்ன செய்வது?
அறிவிலித்தனம்: முதலில் அரசியல் சாசனத்தில் என்ன இருக்கிறது? என்பதைப் படிக்க வேண்டும். அரசியல் சாசனத்தை நாம் யாரும் திருத்தி எழுதிவிட முடியாது. நமக்கு அந்த அதிகாரமும் இல்லை. ஒரு மாநிலத்தின் நிர்வாகத் தலைவராக இருப்பவர் ஆளுநர்தான். அரசியலில் நடிகர் விஜய் நுழைந்து ஒரே ஒருநாள்தானே ஆகி இருக்கிறது. ஆளுநரே தேவை இல்லை என எப்படி பேசுவீர்கள்? ஆகையால் ஆளுநரைப் பொறுத்தவரை சர்ச்சையாக பேசுவதே என்னைப் பொறுத்தவரை அறிவிலித்தனம். அதை யார் சொல்லி இருந்தால் என்ன? அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
நீட் எதிர்ப்பு: நீட் தேர்வை விஜய் எதிர்ப்பதாக கூறுகிறீர்கள். நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்தானே.. அவர்தான் 2010-ல் நாடாளுமன்றத்தில் நீட் மசோதாவை கொண்டு வந்தார்.. முதலில் நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என படிங்க சார்..
அரசியல் சோறு வேகும் என நம்பிக்கை: இன்றைக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் நீட்டுக்கு எதிராக பேசினால் பிராடு. சிலபேருக்கு என்ன கற்பனை என்னவென்றால், திமுக சொல்வதை நாம் கிளிப்பிள்ளை மாதிரி பாலோ அப் செய்து பேசினால்தான் நமக்கு அரசியலில் சோறு சமைக்க முடியும்; சோறு வேகும் என நினைக்கிறாங்க. அது தவறு என்பதை விரைவிலேயே அவர் உணருவார்.
திராவிட சித்தாந்தம்: திராவிட மாடல் என்பது என்ன? திராவிட சித்தாந்தம் என்பது வெறுப்பு அரசியலின் ஆணிவேர்தான். ஜாதி வெறுப்பு, மொழி வெறுப்பு, மாநில வெறுப்பு, தேசிய வெறுப்பு இது எல்லாவற்றுக்கும் அடிப்படை திராவிடம். திராவிடம் என்பது இனமல்ல. நிலத்தைக் குறிக்கக் கூடியது. திராவிடத்துக்கு எதிரானது ஆரியம் அல்ல. கவுடம்.
நாட்டின் சரித்திரம் தெரியாமல், நாம் யார் என்பது அவர்களுக்கே புரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திராவிடம் என்பது வேறு. 1838-ல் திருநெல்வேலியில் கால்டுவெல் கால்வைத்த பின்னர் கால்டுவெல் சொல்லிக் கொடுத்ததை கிளிப் பிள்ளை போல சொல்லிக் கொண்டிருக்கிற கால்டுவெல் புத்திரர்கள் இவர்கள். நடிகர் விஜய் அந்த சித்தாந்தத்தைப் பற்றி பேசினால் அவரும் அதே குட்டையில் ஊறிய மட்டைதான்.
கூட்டணி ஆட்சி: இப்போது கூட்டணி ஆட்சி குறித்து பேசும் நடிகர் விஜய், கடைவிரித்தேன் கொள்வார் இல்லை என அப்புறமாக பேசுவார். 35 ஆண்டுகால பாஜகவின் நிர்வாகி என்ற முறையில் கூட்டணி குறித்து நான் கருத்து சொன்னதே கிடையாது. எங்களது கட்சியின் பார்லிமெண்ட்ரி போர்டுதான் இதுபற்றி முடிவெடுக்கும். ஏற்கனவே கூட்டணி ஆட்சியைத்தான் பாஜக நடத்திக் கொண்டிருக்கிறது. 2026-ம் ஆண்டு தமிழ்நாட்டிலும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணி ஆட்சிதான் அமையும். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.












Click it and Unblock the Notifications