ஒரு கரும்பு விலை ரூபாய் 50100.. இவ்வளவு ரேட்டுக்கு ஏலம் எடுத்த நபர்.. இது நம்ம ஊர்ல தான்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒரு கரும்பு ரூ. 50,100க்கு ஏலம் போனது. ஒரே ஒரு கரும்பு இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போனது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கரும்பு ஏலம் எடுத்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை என்பதால், அப்பகுதி மக்கள் போட்டி போட்டு ஏலம் கேட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 14 ஆம் தேதி தை ஒன்றாம் தேதி பொங்கல், தை 2 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் தை 3 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் திருநாள் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் என்றாலே கரும்பும் சேர்ந்தே நினைவுக்கு வரும். பொங்கல் பண்டிகையையொட்டி, மக்கள் கரும்புகளை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.

தமிழகத்தில் கரும்பு இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக விலைக்கே விற்றது. 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு, ரூபாய் 600 வரை விற்பனையானது. வீடுகளில் கரும்புகளைக் கட்டி வைத்து, மக்கள் பொங்கல் வைத்தனர். இந்நிலையில், காரைக்குடி அருகே புனித வனத்து அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவில் ஒரே ஒரு கரும்பு 50,100 ரூபாய்க்கு ஏலம் போனது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாடத்தான்பட்டி கிராமத்தில் பழமையான புனித வனத்து அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் தை மாதம் 4 ஆம் தேதி பொங்கல் விழா, அந்தோணியார் சப்பர திருவீதி உலாவும் நடைபெறும். மறுநாள் காலை கரும்பு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து நேர்த்திக் கடன் செலுத்தப்பட்ட கரும்பு ஏலம், விவசாயம் செழிக்க பாரம்பரிய மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு ஜனவரி 17 ஆம் தேதி மாலை பொங்கல் விழா நடந்தது. இதில் அக்கிராம மக்கள் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் முன்பு கிராம ஒற்றுமையை போற்றும் வகையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியும், இரவில் புனித வனத்து அந்தோணியார், பாத்திமா மாதா தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது,
தொடந்து நேற்று காலை முக்கிய நிகழ்வான கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர். அதன் பின் நேர்த்திக் கடனாக புனித வனத்து அந்தோணியாருக்கு கொடுக்கப்பட்ட கரும்பு உள்ளிட்ட பொருள்கள் ஆலய வளாகத்தில் வைத்து ஏலம் விடப்பட்டது. இதில் முதல் கரும்பு ஏலம் போன தொகை தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதல் கரும்பு ஏலம் தொடங்கியதும், பலரும் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். 20,000, முப்பதாயிரம் என ஏலத் தொகை எகிறிக் கொண்டிருந்தது. இறுதியாக, முதல் கரும்பை ரூ.50,100-க்கு பாடத்தான்பட்டியை சேர்ந்த அந்தோனி என்பவர் ஏலத்தில் வாங்கினார்.
அதைத்தொடர்ந்து மற்ற கரும்புகளும் அதிக தொகைக்கு ஏலம் போயின. புனித வனத்து அந்தோணியார் கோவிலில் கரும்பு ஏலம் எடுத்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை, எனவே, போட்டி போட்டு ஏலம் கேட்டு ஒரே ஒரு கரும்பை, 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications