துண்டு வீசியதுமே கூடை கூடையாக மீன்கள்.. குளத்தில் மகிழ்ந்த கிராமம்.. சிலிர்த்த சிவகங்கை சிங்கம்புணரி
சிவகங்கை: சிவகங்கையில் நடந்த மீன்பிடி திருவிழாவின் போட்டோக்கள்தான் இணையத்தில் தற்போது வைரலாகி கொண்டிருக்கின்றன.. சிவகங்கை சிங்கம்புணரி அருகே நடந்த மீன்பிடி திருவிழா நிகழ்வை பார்த்த பக்தர்கள் பலரும் சிலிர்ப்பில் ஈடுபட்டு விட்டார்கள். இந்த மீன்பிடி திருவிழாவின் நோக்கம் என்ன? சிங்கம்புணரியில் முன்கூட்டியே இந்த விழாவை நடத்த என்ன காரணம்?
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, கோயில் திருவிழாக்களுக்கு சிறப்பான முக்கியத்துவம் எல்லா காலகட்டத்திலும் இருந்து வருகிறது.. அதிலும், சமீப காலமாகவே, விநோத திருவிழாக்கள் அதிகரித்தவாறே உள்ளது..

ஆண்கள், பெண்கள் திருவிழா
பெண்கள் மட்டுமே கொண்டாடும் விழாக்கள் உள்ளதைபோலவே, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்களும் வருடா வருடம் நடப்பதுண்டு.. முக்கியமாக, சித்திரை திருவிழாவின்போது, பல்வேறு கோயில்களில் இதுபோன்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள் நடத்துவார்கள்..
இதுபோன்ற திருவிழாக்களில், ஆடுகள், கோழிகள், நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்குவது கூடுதல் ஸ்பெஷலாகும்.. பிறகு, நள்ளிரவு நேரத்தில் பொங்கல் வைத்து வழிபாடு துவங்குவதுடன், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு, வைத்து, அண்டா அண்டாவாக அசைவ விருந்து சமைப்பார்கள்..
விடிய விடிய தயாராகும் இந்த கறிவிருந்தினை, சுவாமிக்கு படையல் போட்டு, பிறகு, விழாவில் பங்கேற்றவர்களுக்கு அந்த உணவு பிரசாதமாக வழங்கப்படும். பெரும்பாலும் விவசாயம் செழிக்கவும், மழைவேண்டியும், இப்படியான திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
கண்மாயில் மீன்பிடி திருவிழா
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாப்பூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் சுணை கண்மாயில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பாரம்பரிய மீன்பிடித் திருவிழா தற்போது நடைபெற்றுள்ளது.. கிராமத்துக்கு வருடா வருடம் மழை கிடைக்க வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக இந்த மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கமாகும். முக்கியமாக நெல் அறுவடைக்கு பிறகு, கோடைகாலத்தில் இந்த திருவிழா நடத்துவார்கள்..
ஆனாலும், இந்த வருடம் விவசாய தேவைக்கு கண்மாய் நீரை பயன்படுத்தியதாலும், கோடை வெயில் முன்கூட்டியே துவங்கிவிட்டதாலும், கண்மாயில் தண்ணீர் குறைந்து வந்தது. அதனால்தான், கண்மாயில் உள்ள மீன்களை பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் மீன்பிடி திருவிழா குறித்து அறிவிப்பு செய்தனர்.
துண்டு வீசியதுமே திரண்ட மக்கள்
காளாப்பூர் சூரக்குடி, கள்ளம்பட்டி, புதுப்பட்டி, மூவன்பட்டி போன்ற சுற்று வட்டார கிராமங்களிலிருந்து திரண்டு வந்த கிராம மக்கள் தாங்கள் தயாராக வைத்திருந்த ஊத்தா கூடை, கச்சா, கொசுவலை, அரிவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்பிடிக்க தயாரானார்கள்..
நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க, மடைக்கு மாலை அணிவித்து சாமி கும்பிட்டு துண்டு வீசியதுமே மீன்பிடிக்க அனுமதி கிடைத்துவிட்டது.. இதையடுத்து, கரையோரம் காத்திருந்த கிராம மக்கள், ஊத்தா கூடையுடன் கண்மாயில் துள்ளி குதித்து, மீன்களை போட்டி போட்டு அள்ளினார்கள்..
இந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து வருகை தந்த மக்கள் விரா, கட்லா, கெண்டை, கெழுத்தி உள்ளிட்ட நாட்டு வகை மீன்களை கூடை கூடையாக அள்ளிக் கொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றார்கள்.












Click it and Unblock the Notifications