சென்னை, திருவாரூர் பாணி.. எஸ்ஐ-யை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடி சுட்டு பிடிப்பு.. பரபரத்த சிவகங்கை
சிவகங்கை: சிவகங்கை அருகே காளையார்கோவில் அருகே வழக்கு ஒன்றில் விசாரணை செய்ய முயன்ற போது போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி அகிலன் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதில் படுகாயமடைந்த எஸ்ஐ குகன் மற்றும் ரவுடி அகிலன் ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காவல் உதவி ஆய்வாளர் குகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவரது இருசக்கர வாகனத்தை ஆய்வு செய்ததில் அவர் மீது ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் ரவுடி அகிலன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரிக்க முயன்றனர். அப்போது அந்த நபர் திடீரென தான் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குகனை வெட்டிவிட்டு தப்ப முயன்றார். இதில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குகன் காயமடைந்தார்.
இதையடுத்து உடனே சுதாரித்துக்கொண்ட மற்றொரு போலீஸ்காரர் ரவுடி அகிலனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்ததில் ரவுடி அகிலன் அங்கேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து போலீசார் போலீஸ் எஸ்ஐ குகன் மற்றும் ரவுடி அகிலனை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் இருவரும் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே சென்னை சேத்துப்பட்டு அருகே தப்பி ஓட முயன்ற ரவுடி ரோகித் ராஜை போலீஸ் பெண் எஸ்ஐ தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டு பிடித்து இருந்தார். இதேபோன்று நேற்று திருவாரூர் அருகேயும் போலீசை தாக்கி விட்டு தப்ப முயன்றவரை போலீசார் சுட்டு பிடித்து இருந்தனர்.












Click it and Unblock the Notifications