ஆசிரியர் வீட்டில் அள்ள அள்ள தங்கம்.. மதிப்பு கோடிக்கணக்கில்.. சிவகங்கையை உலுக்கிய பட்டப்பகல் சம்பவம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பட்டப்பகலில் ஆசிரியர் தம்பதி வீட்டில் 200 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதேபோல் இதே சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அருகே மற்றொரு வீட்டில் 56 பவுன் தங்க நகை கொள்ளை போயிருக்கிறது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தில்லை நகரை சேர்ந்த 60 வயதாகும் சஞ்சீவி ஞானசேகரன், தேவகோட்டை நகரத்தார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவருடைய மனைவி ஜெயராணி(56). ஜெயராணி நானாகுடி அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய 27 வயது மகள் பிரின்சிலி தேவகோட்டை ராம்நகர் தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று சஞ்சீவி ஞானசேகரனும், ஜெயராணியும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டனர். பிரின்சிலி வீட்டை பூட்டிவிட்டு தபால் நிலையத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மதிய உணவுக்காக பிரின்சிலி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்திருக்கிறார்.
அங்கு இரும்பு பெட்டகம் திறந்து கிடந்திருக்கிறது. அதில் வைக்கப்பட்டிருந்த 200 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் யாரும் இந்த நேரத்தில் மட்டும் இருக்க மாட்டார்கள் என்று நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் நகைகள் வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டகத்தின் சாவி அருகில் இருப்பதை பார்த்து எடுத்து, பெட்டகத்தை திறந்து அதனுள் இருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக பிரின்சிலி தனது பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக விரைந்து வந்து தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்
சிவகங்கையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் நேரில் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு, சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தேவகோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே காரைக்குடி அருகே மற்றொரு வீட்டில் 56 பவுன் தங்க நகை கொள்ளை போயிருக்கிறது. காரைக்குடி அருகே உள்ள கருவியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுராமன். இவர் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் நிர்வாக தலைவர் ஆவார். இவர் அண்மையில் தனது குடும்பத்தினருடன் கோவைக்கு சென்றார்.
இதனிடையே வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 56 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள். இதில் 38 பவுன் கோவிலுக்கு சொந்தமான நகை என்றும், 18 பவுன் சேதுராமனுக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக திருப்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications