கற்பனைக்கும் எட்டாத பிளான்! இந்த "இரு" தமிழக கோயில்களை குறி வைக்கிறார்கள்.. கார்த்தி சிதம்பரம் பரபர
சிவகங்கை: தமிழகத்தைச் சேர்ந்த இரு கோயில்களைத் தனியார் டிஸட் கீழ் கொண்டு செல்ல திட்டம் போடுவதாகச் சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நமது நாட்டில் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே சிவகங்கையில் தீவிர பிரச்சாரம் செய்து வரும் சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் சில பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம்: அங்குப் பிரச்சாரத்தின் போது பேசிய கார்த்தி சிதம்பரம், "நான் ஒன்று சொல்கிறேன் கவனமாகக் கேளுங்கள். இப்போது அவர்கள் புதிதாகக் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளனர். அந்த சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை. நம்பிக்கை இருப்பவர்கள் அந்த கோயிலுக்குத் தாராளமாகச் செல்லலாம். ஆனால், அந்த கோயிலை அரசு கட்டவில்லை. அது தனியார் டிரஸ்ட் மூலம் கட்டப்பட்ட கோயில்.
நமது ஊரில் அறநிலையத்துறை இருக்கே.. அதுபோல இல்லை. அந்த கோயிலைக் கட்டியது அரசு இல்லை தனியார் டிரஸ்ட்.. அந்த டிரஸ்டிற்கு 3000 கோடி ரூபாய் பணம் இருக்கிறது. மேலும், அந்த டிரஸ்ட் வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கவும் அந்த பணத்திற்கு வரிவிலக்கும் அளித்துள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு 8 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்க உள்ளது. உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நிதி வர உள்ளது.
இரு தமிழக கோயில்கள்: மொத்தம் 11 ஆயிரம் கோடி ரூபாய் அவர்கள் டிரஸிட்டில் இருக்கும். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த கோயிலுக்குச் சம்பந்தப்பட்ட மற்ற மாநிலங்களில் இருக்கும் கோயில்களை அந்த டிரஸ்டிற்கு கீழே கொண்டு போகப் போகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து 2 கோயில்களை அவர்கள் குறிவைக்கிறார்கள். ஒன்று ராமேஸ்வரம் கோயில்.. மற்றொன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
இந்த இரண்டு கோயிலையும் இங்கிருந்து எடுத்து அந்த டிரஸ்டில் சேர்க்கப் பார்க்கிறார்கள். அது அரசுக்குக் கீழ் வராது.. இங்கிருப்பதைப் போல அமைச்சர் எல்லாம் இருக்க மாட்டார்கள். சேர்த்த பிறகு முதலில் அந்த கோயில்களில் என்ன நடக்க வேண்டும் என்பதை இந்த டிரஸ்ட் முடிவு செய்யும் என்பார்கள். அடுத்து என்ன முறையில் அங்கு வழிபட வேண்டும் என்பதை டிரஸ்ட் சொல்லும் என்பார்கள். அதன் பிறகு யார் கோயிலுக்கு வரலாம் வரக்கூடாது என்பார்கள்.
கோயில்களில் கட்டுப்பாடுகள் வரும்: அம்பேத்கர், காந்தி, பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் நமக்குப் போராடிப் பெற்றுத் தந்தது எல்லாமே போய்விடும். அவர்கள் கைவசம் சென்றுவிட்டால் யார் கோயிலுக்குள் வரலாம்.. யார் வரக்கூடாது.. எப்படி வழிபாடு நடத்த வேண்டும் என அனைத்தையும் அவர்கள் முடிவு செய்வார்கள்.
அதன் பிறகு கோயிலைச் சுற்றி இவர்கள் தான் கடை வைக்க வேண்டும். இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் கடை வைக்க வேண்டும் என்பார்கள். கடைக்குப் பிறகு கோயிலைச் சுற்றி யார் இருக்கலாம் என்பார்கள். அதாவது மீண்டும் மெல்ல மனு சாஸ்திரத்தைக் கொண்டு வருவார்கள். அந்த நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். இங்கு நடந்த சமூக சீர்திருத்தங்கள் இல்லாமல் போகும்.
பரபர குற்றச்சாட்டு: இதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து முடித்துவிடுவார்கள். முதலில் கோயிலைக் கையில் எடுப்பார்கள். கோயிலை யார் நிர்வாகம் செய்ய வேண்டும் என்பார்கள். அடுத்துச் சுற்றி யார் கடை வைக்கலாம் என்பார்கள்.. அடுத்து வீட்டில் யார் இருக்கலாம் என்பார்கள்.. அடுத்து ஊரில் யார் இருக்கலாம் என்பார்கள்.. கடைசியில் கோயிலைச் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே ஊருக்குள் வர வேண்டும் என்று கூடச் சொல்வார்கள். நீங்கள் நினைப்பது போல இது சாதாரணம் இல்லை. நமது கற்பனைக்கும் தாண்டி அவர்கள் திட்டம் போட்டு வைத்துள்ளார்கள்" என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications