கல்லூரியிலும் கஞ்சா விற்பனையா? காரைக்குடியில் 2 மாணவர்கள் கைது!
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில், கஞ்சா விற்பனை செய்ததாக கல்லுரி மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாட்டை ஒழித்துக்கட்டும் வகையில் 'ஆபரேஷன் கஞ்சா 2.0' என்ற பெயரில் காவல்துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, காவல் நிலைய எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை அதிரடியாக கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சிவகங்கையில் தீவிர சோதனை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் கஞ்சா விற்பனை வேகமாக பரவி வருவைதையொட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சுப்பிரண்டு வினோஜி ஆகியோரின் அதிரடி நடவடிக்கைகளின் பேரில், காரைக்குடியில் தனிப்படை போலீசார் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சா விற்ற மாணவர்கள் கைது
இந்நிலையில், முத்துராமலிங்க நகரில் கஞ்சா விற்றதாக காரைக்குடியில் உள்ள கல்லூரியில் தமிழ் இலக்கியம் 3 ஆம் ஆண்டு படிக்கும் மாணவர் மாயராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், மதுரையில் பாலிடெக்னிக் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு கஞ்சா விற்பனை செய்து வந்த கலைவாணன் என்ற மாணவனையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சா விற்பனையில் நல்ல லாபம் கிடைத்ததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தியது விசாரணையில் தெரியவந்தது. கஞ்சா விற்று வந்த இரு மாணவர்களிடம் இருந்தும் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெற்றோர்கள் அச்சம்
கடந்த சில நாட்களில் மட்டும் காரைக்குடியில் கஞ்சா விற்றதாகவும் புகைக்ததாகவும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 22 வயதிக்குட்பட்டவர்கள் என்பதும், இவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மாணவர்களிடையே அதிவேகமாக கஞ்சா பழக்கம் பரவி வருவதால், மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்துள்ளனர்.

கஞ்சா பழக்கத்தை ஒழிக்க விழிப்புணர்வு
காரைக்குடியில் கல்லூரி மாணவர்களிடையே அதிவேகமாக பரவி வரும் கஞ்சா பழக்கத்தை ஒழிக்க, மாவட்ட போலீஸ்சார், கல்வி நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் கஞ்சா ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

களமிறங்கும் தனிப்படை போலீசார்
சிவகங்கை மாவட்டத்திற்கு கஞ்சா அனுப்பும் மொத்த விற்பனையாளர்களை முற்றிலுமாக ஒழிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரெண்ட் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் களத்தில் இறங்கியுள்ளனர். மேலும் இவர்களுக்கு சில விஷேச அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதனையொட்டி சில நாட்களில் கஞ்சா விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்களும் திடுக்கிடும் செய்திகளும் வெளியாகும் என தெரிகிறது.
கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம், காரைக்குடி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications