சிவகாசி பட்டாசு ஆலைகளில் விதி மீறல்.. கடும் நடவடிக்கை பாயும் என அமைச்சர் சி.வி. கணேசன் எச்சரிக்கை
சிவகாசி: பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். வெடி விபத்தில் உயிரிழந்த முனீஸ்வரி என்பவரின் மகளின் படிப்புச் செலவை அரசே ஏற்கும் என்று கூறியுள்ளார். முனீஸ்வரியின் மகளுக்கு 2 நாட்களில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு வீடு கட்டித் தரப்படும் எனவும் கூறியுள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 25 நாட்கள் மட்டுமே இருப்பதால் பட்டாசு ஆலைகளில் உற்பத்தியை உரிமையாளர்கள் வேகப்படுத்தி வருகின்றனர். உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை பேக் செய்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். உள்ளூர்களில் கடைகள், குடோன்களுக்குத் தேவையான பட்டாசுகளையும் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில் மாவட்ட நிர்வாகத்தால் தொழிலாளர் நலத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய 4 நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தக் குழுக்கள் மாவட்டம் முழுவதும் இருக்கக் கூடியப் பட்டாசு ஆலைகளுக்கு திடீர் ஆய்வு நடத்தி, விதிமீறல் இருந்தால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் சிவகாசி அருகே நேற்று இரண்டு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
சிக்கநாயக்கன்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் மருந்து கலக்கும் போது ஏற்பட உராய்வால் வெடி விபத்து நிகழ்ந்து வேம்பு என்ற தொழிலாளி உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேற்பார்வையாளரை மாறனேரி போலீசார் கைது செய்துள்ள நிலையில், முத்து விஜயன் தலைமறைவாகி உள்ளார். கைதானவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே கங்காகுளம் கோபால்நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை எம்.புதுப்பட்டி அருகே ரெங்கபாளையம் பகுதியில் உள்ளது. இந்த ஆலையின் நுழைவு பகுதியில் சுந்தரமூர்த்திக்கு சொந்தமான பட்டாசு கடை, மருந்து சேமிப்பு கிடங்கு உள்ளது. நேற்று பிற்பகல் வெளியூரை சேர்ந்தவர்கள் கடையில் பட்டாசு வாங்க வந்தனர். பேன்சி ரக பட்டாசுகளை கடையின் அருகே வைத்து வெடித்து பார்த்தனர்.
அப்போது வெடித்து சிதறிய சில பட்டாசுகள் எதிர்பாராதவிதமாக கடைக்குள் விழுந்தன. இதில் கடையில் இருந்த பட்டாசுகள் தீப்பிடித்து நாலாபுறமும் வெடித்துச் சிதறின. இதனால் கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு அந்தப் பகுதியே புகைமண்டலமாக மாறியது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த தமிழ்ச்செல்வி, பஞ்சவர்ணம், மகாதேவி, முனீஸ்வரி, தங்கமலை, அனிதா உள்ளிட்ட 12 பெண் தொழிலாளர்கள் பாலமுருகன் என்ற ஒரு ஆண் தொழிலாளர் உட்பட 13 தொழிலாளர்கள் தீயில் கருகி பலியாகினர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பொன்னுத்தாயி, சின்னத்தாயி ஆகிய இரு பெண்கள் தொழிலாளர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே ரெங்கபாளையம் பட்டாசு கடை உரிமையாளர் சுந்தரமூர்த்தி, மேற்பார்வையாளர் கனகராஜ், மேலாளர் ராம் குமார் ஆகிய 3 பேரை எம்.புதுப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் அனுமதி பெற்றதைவிட அதிகமான அளவில் பட்டாசுகளை பேக்கிங் செய்யும் அறையில் வைத்ததே விபத்திற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. சிவகாசியில் நிகழ்ந்த இரு பட்டாசு விபத்துகளை விசாரணை செய்வதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழு விரிவான விசாரணையை செய்து நாளை இந்த விபத்து தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு நேரில் சென்ற அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் ஆகியோர் உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். காயம் அடைந்த ஒரு பெண்ணையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர், தந்தை இல்லாத மாணவி சந்தியா என்பவர் தனது தாய் முனீஸ்வரியையும் விபத்தில் இழந்து ஆதரவற்று இருக்கும் நிலையில், அவரது கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும் 2 நாட்களில் அவருக்கு வீட்டு, மனை பட்டா வழங்கப்படும் என்றும் கணேசன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கணேசன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில், இன்று நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தில் இந்த விபத்து தொடர்பாகவும் விதிமுறைகளை மேலும் கடுமையாக்கி விபத்துகளை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications