அக்சர், ரிங்கு இருக்கும் போது.. ஆயுஷ் பதோனியை தேர்வு செய்தது ஏன்? பயிற்சியாளர் சொன்ன அந்த காரணம்!
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகிய நிலையில், அவரின் இடத்திற்கு ஆயுஷ் பதோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது தேர்வு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆயுஷ் பதோனி இந்திய அணிக்கு தேர்வானதற்கான காரணத்தை பயிற்சியாளர் சித்தான்ஷு கோட்டக் கூறியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது. இதனிடையே முதல் போட்டியின் போது நட்சத்திர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்தார். இதனால் வாஷிங்டன் சுந்தருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இடத்தில் ஆயுஷ் பதோனி தேர்வாகி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் ஆயுஷ் பதோனி ஃபினிஷிங் ரோலில் பெரிய ஹிட்டர் இல்லை. அதேபோல் ஐபிஎல் தொடரில் பெரியளவில் பவுலிங்கும் வீசியதில்லை. தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே தொடரிலும் ஆயுஷ் பதோனி திரும்பி பார்க்க வைக்கும் ஆட்டத்தையும் பெரிதாக வெளிப்படுத்தவில்லை. இதனால் ஆயுஷ் பதோனியின் தேர்வு குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அக்சர் படேல், ரிங்கு சிங், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் இருக்கும் போது, எங்கிருந்து திடீரென ஆயுஷ் பதோனி இந்திய அணிக்குள் வந்தார் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இந்த நிலையில் ஆயுஷ் பதோனி தேர்வு குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்ஷு கோட்டக் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி சித்தான்ஷு கோட்டக் பேசுகையில், ஆயுஷ் பதோனி நீண்ட நாட்களாக டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய ஏ அணிக்காகவும் விளையாடி இருக்கிறார். எந்த அணியும் 5 பவுலர்களுடன் களமிறங்குவது கிடையாது. கடந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது 5 பவுலர்களை மட்டும் பிளேயிங் லெவனில் வைத்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
அதனால் 4 முதல் 5 ஓவர்கள் வரை வீசக்கூடிய ஆல்ரவுண்டரை தேடினோம். அதன் காரணமாகவே ஆயுஷ் பதோனி தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே ஆயுஷ் பதோனி அனைத்து போட்டிகளிலும் பவுலிங் செய்ய தொடங்கி இருந்தார். பேட்டிங் பயிற்சியின் போது 8 முதல் 10 ஓவர்களை வரை பதோனி வீசி இருக்கிறார்.
ஆஃப் ஸ்பின்னரான ஆயுஷ் பதோனி கேரம் பால், ஆர்ம் பால் உள்ளிட்டவற்றையும் வீச கற்று இருக்கிறார். இதனால் நாளைய ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் இடத்தில் ஆயுஷ் பதோனிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த போது, கம்பீர் அந்த அணியில் ஆயுஷ் பதோனியை வாங்கி இருந்தார். இதுவும் பதோனியின் தேர்வுக்கு காரணமாக இருக்கலாம்.












Click it and Unblock the Notifications