முழங்காலில் அடித்த பந்து.. பேண்டேஜ் போட்டு பயிற்சியை நிறுத்திய கம்பீர்.. கோலிக்கு என்ன நடந்தது?
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி காயம் அடைந்துள்ளார். பயிற்சியின் போது வேகப்பந்துவீச்சாளர் வீசிய பந்து அவரின் முழங்காலுக்கு அருகில் பட்டதால், உடனடியாக விராட் கோலி மருத்துவ உதவியை நாடி இருக்கிறார். இதனால் அவரது கால்களில் பேண்டேஜ் போடப்பட்டு பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடவுள்ளன. துபாய் மைதானத்தில் நாளை நடக்கவுள்ள இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். துபாய் மைதானத்தின் பிட்ச் எளிதாக தேய்மானம் அடைந்து ஸ்லோ பிட்சாக மாறும்.

துபாய் மைதானம்
இதனால் பேட்ஸ்மேன்கள் சிறிது நேரம் பிட்சில் நின்று நேரம் செலவிட்டால் மட்டுமே அவர்களால் ரன்களை சேர்க்க முடியும். குறிப்பாக பவுண்டரி, சிக்ஸ் அடிப்பதை விடவும் அதிகமாக ஓடியே ரன்களை சேர்க்க வேண்டும். இதனால் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக விராட் கோலி இருக்கிறார். ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக அப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
விராட் கோலி சம்பவம்
இதுவரை துபாய் மண்ணில் ஆடிய 4 போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 217 ரன்களை விராட் கோலி விளாசி இருக்கிறார். இறுதிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடி விராட் கோலி கோல்டன் பேட்டை கைப்பற்றுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற பேட்டிங் பயிற்சியில் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
முழங்காலில் காயம்
நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை சமாளித்து விளையாடுவதற்காக விராட் கோலி இன்று வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் வீசிய பந்து விராட் கோலியின் முழங்காலில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக விராட் கோலி மருத்துவ உதவியை நாடி இருக்கிறார்.
பயிற்சியை நிறுத்திய கம்பீர்
மருத்துவர்கள் உடனடியாக காயம் அடைந்த இடத்தில் ஸ்பிரே அடித்து பேண்டேஜ் போட்டுள்ளனர். இதன்பின் உடனடியாக விராட் கோலியின் பேட்டிங் பயிற்சியை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிறுத்தியுள்ளார். இந்த காயத்திற்கு பின் சக வீரர்களின் பயிற்சியை பார்த்துவிட்டே விராட் கோலி ஹோட்டலுக்கு திரும்பி இருக்கிறார்.
ரசிகர்கள் சோகம்
இருந்தாலும் நாளைய ஆட்டத்தில் விராட் கோலியின் காயம் எந்த சிக்கலை உருவாக்கிவிடக் கூடாது என்று அவரின் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். ஏனென்றால் கடந்த சில போட்டிகளாகவே விராட் கோலி ஃபீல்டிங்கின் போது அதிக நேரம் ஓய்வறைக்கு சென்று திரும்பி கொண்டே இருந்தார். இதனால் இந்த காயம் அவரின் ஆட்டத்தை பாதிக்க கூடாது என்று ரசிகர்கள் இப்போதே புலம்ப தொடங்கி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications