CSK vs MI: பிளாக்கில் டிக்கெட் வாங்கினால் கண்டிப்பாக பணம் போய்டும்! ஐயோ இவ்வளவு பிரச்னை இருக்கா!
சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் படுஜோராக நடந்து வருகின்றன. பிளாக் டிக்கெட் வாங்க முயற்சிக்கும் ரசிகர்கள், அப்படியான டிக்கெட்டுகளை தப்பித் தவறி கூட வாங்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை வாங்கினால், அவர்கள் வாங்கும் போது பின் தொடர வேண்டிய சில விஷயங்களை குறித்து பார்க்கலாம்.
18வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இதில் மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் சிஎஸ்கே - மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் நேற்று சென்னை அணியின் இணையப் பக்கத்தில் ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்பட்டது.

காலை 10.15 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், சுமார் 3 லட்சம் பேர் வரை வரிசையில் காத்திருந்தனர். இதனால் சிஎஸ்கே - மும்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது. மொத்தமாக 38 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக் கூடிய சேப்பாக்கம் மைதானத்தின், பாதி டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன.
முக்கியமான ஸ்டாண்டுகளில் இருந்து பார்க்கக் கூடிய டிக்கெட்டுகள் விற்பனைக்கே வரவில்லை. அவை ஸ்பான்சர்கள், ஐபிஎல் அணிகள், விஐபி-க்கள், பிசிசிஐ நிர்வாகிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சிஎஸ்கே அணியின் கிரிக்கெட் பலரும் சோசியல் மீடியாவில் டிக்கெட் விற்பனையே ஒரு ஸ்கேம் என்று விரக்தியை குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனிடையே சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை கள்ள மார்க்கெட்டில் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டின் குறைந்தபட்ச விலையாக ரூ.1,700 நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பிளாக் மார்க்கெட்டில் ரூ.7 ஆயிரம் தொடக்க விலையாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாகிறது.
ஸ்பான்சர்களிடம் இருந்து பெரும்பாலான டிக்கெட்டுகள் இப்படி பிளாக் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகின்றன. இம்முறை ஐபிஎல் டிக்கெட்டுகள் வாங்க ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருக்கும் நிலையில், ஒருவேளை பிளாக் மார்க்கெட்டில் வாங்க முடிவு செய்தால், ஏராளமானோர் ஏமாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் என்று போலி டிக்கெட்டுகள் விற்பனையும் ஒரு பக்கம் படுஜோராக நடந்து வருகிறது. சிஎஸ்கே - மும்பை இடையிலான போட்டிக்கான டிக்கெட்டுகளில் QR கோடு மூலமாகவே அனுமதிக்கப்படுவார்கள். அந்த QR கோடு போட்டி நாளன்று 3.30 மணிக்கு ஓபனாகும்.
அதற்கு முன்பாக அந்த QR கோடினை திறக்க முடியாது. அதேபோல் ஆன்லைன் டிக்கெட்டுகளை ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாதபடியே தொழிற்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்க்ரீன்ஷாட்கள் மற்றும் QR கோடுகளோடு இருக்கும் டிக்கெட்டுகளை வாங்கி ரசிகர்கள் ஏமாற வேண்டாம். அதேபோல் தெரிந்த நபர்களிடம் மட்டுமே டிக்கெட்டுகளை அதன் அடிப்படை விலைக்கு மட்டுமே வாங்குமாறு பலரும் எச்சரித்து வருகின்றனர். தெரியாத நபர்களிடம் வாங்கினால், பண இழந்து ஏமாற்றப்பட வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications