ருத்ர தாண்டவம்.. “1983ல் கபில்தேவை பார்த்த மாதிரி இருக்கு”.. மேக்ஸ்வெல்லுக்கு குவியும் பாராட்டுகள்!
சென்னை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல் அடித்த இரட்டை சதம் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது ஆட்டம் பலரும் 1983ல் புருடென்ஷியல் உலகக் கோப்பைப் போட்டியில் கபில்தேவின் ஆட்டத்தை நினைவுப்படுத்துவதாக கூறியுள்ளனர்.
ஐசிசி உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கும்-ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நேற்று நடந்த ஆட்டம், கிரிக்கெட் ரசிகர்களை நாற்காலியின் நுனிக்கே கொண்டுவந்தவிட்டது. நடப்பு உலககோப்பை தொடரில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆப்கானிஸ்தான், நேற்று முப்பை வான்கடே மைதானத்தில் டாஸை வென்று பேட்டிங்கில் இறங்கியது. மொத்தமாக 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 291 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் அவுட் ஆகாமல் 129 ரன்களை குவித்திருந்தார்.

இப்படியாக 292 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆஸ்திரேலியா களமிறங்கியது. பேட்டிங்கில் அடித்து ஆடியதை போல பௌலிங்கிலும் அடித்து நொறுக்க தொடங்கியது ஆப்கான். எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தது. மிட்செல் ஸ்டார்க் விக்கெட்டில் வெற்றியின் வாசனையை ஆப்கானிஸ்தான் நுகர தொடங்கியது. அவ்வளவுதான் 91 ரன்களில் 7 விக்கெட்டுகளை சரிசத்தது. இது ஆஸிக்கு ஒரு உளவியல் சவால். முன்னணி வீரர்களே போய்விட்டனர் கடைசியில் நாம் இறங்கி என்ன செய்ய போகிறோம் என்கிற நிலைக்கு ஆஸி வந்துவிடும் என்பதுதான் ஆப்கானின் மனகணக்கு.
ஆனால் 8வதாக களமிறங்கிய க்ளென் மேக்ஸ்வெல் ஆட்டத்தையே மாற்றுவார் என்று ஆப்கான் வீரர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. மொத்தம் 128 பந்துகளில் மேக்ஸ்வெல் விளாசியது 201 ரன்கள். அவரது கேட்சை தவறவிட்டது, அவர் அடித்து ஆடிய பாணி, உடல் வலியால் துடித்த போதும் விடாமல் விளையாடியது என அனைத்தும் ரசிகர்கள் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. குறிப்பாக இவரது ஆட்டம் கடந்த 1983ல் புருடென்ஷியல் உலகக் கோப்பைப் போட்டியில் கபில்தேவின் ஆட்டத்தை நினைவுப்படுத்தும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
இதுவரை நடந்த ஒன் டே இன்னிங்ஸில் மொத்தமாக 8 வீரர்கள்தான் அதிக ரன்களை குவித்துள்ளனர். அதில் கபில்தேவும் ஒருவர். இந்திய அணியை பொறுத்த அளவில் 1979 தொடங்கி 1983 வரை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அது தன்னை பெரியதாக நிரூபித்திருக்கவில்லை. அப்போது மேற்கிந்திய தீவுகள் அணிதான் மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தது. 1975,1979ஐ தொடர்ந்து 1983 உலக கோப்பையை இந்த அணிதான் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல பலரும் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு லாயக்கு இல்லை என்றே வெளிப்படையாக பேசினர். ஒரேயொரு சின்ன ஆறுதல் என்னவெனில் 1975ம் ஆண்டு இந்திய அணி, கிழக்கு ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.
ஆனால் இந்த வெற்றி இந்திய அணியின் தரத்தை நிரூபிக்க போதுமானதாக இருக்கவில்லை. இப்படி இருக்கையில் 1983ம் ஆண்டு புருடென்ஷியல் உலகக் கோப்பைப் போட்டியில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. தொடக்கத்தில் மேற்கிந்திய, ஜிம்பாப்வே அணிகளிடம் இந்தியா வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்து ஆஸ்திரேலியா, மேற்கிந்திய அணிகளிடம் கடுமையாக தோல்வியடைந்தது. அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது என்று இருக்கும்போதுதான் அந்த சாதனை நிகழ்ந்தது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மற்றொரு ஆட்டத்தில் டாஸ் வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் இறங்கியது. இதில்தான் கபில்தேவ் 175 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது அதிரடியான ஆட்டம் இந்திய அணியின் மீதான பார்வையை அப்படியே தலைகீழாக மாற்றியது. அந்த காலத்தில் அதுவரை ஒரு நாள் ஆட்டத்தில் யாரும் பதிவு செய்யாத ரன்கள் அது. கபில்தேவை ஒட்டுமொத்த இந்தியாவும் உச்சி முகர்ந்தது. இறுதியாக இந்த தொடரில் இந்தியா உலக கோப்பையை கைப்பற்றி மேற்கிந்திய தீவுகளுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்திற்கே ஷாக் கொடுத்தது.
இதேபோன்றதொரு ஆட்டத்தை 40 ஆண்டுகள் கழித்து தற்போது மேக்ஸ்வெல்லிடம் பார்த்தாக ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். அப்போது கபில்தேவுக்கு எந்த உடல்நல பிரச்னையும் இருக்கவில்லை. மட்டுமல்லாது அது 60 ஓவர் போட்டி. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் மேக்ஸ்வெல் கடும் வலியால் அவதியுற்றார். இருப்பினும் விடா முயற்சியில் ஆஸி ஐசிசி உலககோப்பை அரையிறுதிக்கு தற்போது தேர்வாகியுள்ளது. மேக்ஸ்வெல்லின் ஆட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications