ஹெல்மெட்டை தூக்கியெறிந்து.. ஆவேசமான ஸ்டப்ஸ்.. நடுவர்களுடன் மோதிய ராணா.. என்ன நடந்தது?
சென்னை: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின் போது டெல்லி அணியின் நட்சத்திர வீரரான ஸ்டப்ஸ் க்ளவுஸை மாற்ற நடுவர்கள் அனுமதிக்காதது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இதனால் ஆவேசம் அடைந்த நிதிஷ் ராணா மற்றும் பயிற்சியாளர் ஹேமங் பதானி இருவரும் நடுவருடன் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 212 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 115 ரன்களை விளாசி தள்ளினார். இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இந்தப் போட்டியில் இளம் நட்சத்திர வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் க்ளவுஸ் மாற்றிக் கொள்ள நடுவர்கள் அனுமதிக்காதது சர்ச்சையாகி இருக்கிறது. கடைசி 2 ஓவர்களில் டெல்லி அணியின் வெற்றிக்கு 32 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது 19வது ஓவரை வீச ஓவர்டன் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 2வது பந்தை ஒய்டு யார்க்கராக ஓவர்டன் வீசினார். அதற்கு கள நடுவர் உடனடியாக ஒய்டு கொடுத்தார்.
ஆனால் சிஎஸ்கே அணி ஒய்டு இல்லை என்று கூறி ரிவ்யூ எடுத்தது. இதனால் கால தாமதம் ஏற்பட்டது. அந்த கேப்பில் ஸ்டப்ஸ் தனது க்ளவுஸை மாற்ற வேண்டும் என்று டெல்லி அணிக்கு சிக்னல் கொடுத்தார். அப்போது கருண் நாயர் க்ளவுஸ் எடுத்துக் கொண்டு பவுண்டரி லைனில் இருந்து களத்திற்கு வர முயற்சித்த போது, பவுண்டரி லைனில் நின்றிருந்த 4வது நடுவர் தடுத்தார்.
இதனால் கருண் நாயர் மற்றும் ஹேமங் பதானி இருவரும் சென்று நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அடுத்த பந்திலேயே ஸ்டப்ஸ் மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் கோபமாக வெளியேறிய ஸ்டப்ஸ், ஓய்வறைக்கு சென்று ஹெல்மெட்டை வீசி எறிந்து ஆவேசத்தை வெளிப்படுத்தினார்.
அதேபோல் டெல்லி அணியின் சீனியர் வீரரான நிதிஷ் ராணா நேரடியாக நடுவருடன் மோதலில் ஈடுபட்டார். ஓவருக்கு நடுவிலும் க்ளவுஸ் மாற்றிக் கொள்ள நடுவர்கள் அனுமதிக்கவில்லை என்று வாக்குவாதம் நடந்திருக்கிறது. இதனால் நடுவர்கள் ஏன் ஸ்டப்ஸ் க்ளவுஸ் மாற்ற அனுமதிக்கவில்லை என்ற விவாதம் ரசிகர்களிடையே சர்ச்சையாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications