சிஎஸ்கே அணியால் கம்பேக் கொடுக்க முடியுமா? கேப்டன் ருதுராஜ் முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன?
சென்னை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலமாக ஹாட்ரிக் தோல்வியை சிஎஸ்கே அணி பெற்றுள்ள நிலையில், இனி வரும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி, இந்த சீசனில் மோசமான தோல்வியை பெற்று வருகிறது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிறந்த வெற்றியை பெற்றாலும், அடுத்ததாக விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. அதில் சொந்த மண்ணிலேயே 2 தோல்விகளை சந்தித்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சிஎஸ்கே-க்கு சவால்
இந்த நிலையில் அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி வலிமை வாய்ந்த பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது. பஞ்சாப் அணியின் சொந்த மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. கடந்த 3 போட்டிகளாகவே சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பல்வேறு மாற்றங்களை பிளேயிங் லெவனில் செய்து வருகிறார்.
தொடக்க வீரராக ருதுராஜ்
ஆனாலும் நம்பர் 3ல் களமிறங்குவதை மட்டும் ருதுராஜ் கெய்க்வாட் மாற்றிக் கொள்ளவில்லை. ஏனென்றால் மெகா ஏலத்தின் போதே ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் 3ல் களமிறங்குவார் என்று முடிவு எடுக்கப்பட்டது. தற்போது ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பயிற்சியாளர் ஃபிளமிங் கூட்டணி மாற்று திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.
4 போட்டிகளிலும் சொதப்பல்
அதன்படி வழக்கம் போல் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. கடந்த 4 போட்டிகளிலும் ருதுராஜ் கெய்க்வாட் 2 ஓவர்களுக்குள் களத்திற்கு வந்துவிடுகிறார். இதற்கு அவர் தொடக்க வீரராக களமிறங்கி சிஎஸ்கே அணிக்கு சிறந்த தொடக்கத்தை கொடுக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
அதேபோல் சிஎஸ்கே அணியில் தொடந்து சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில், சில ஜூனியர் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து முயற்சிக்க வேண்டும். டெல்லி பிரீமியர் லீக் தொடரில் நிரூபித்த வன்ஷ் பேடி, நீண்ட ஆண்டுகளாக சிஎஸ்கே அணியில் இருக்கும் ஷேக் ரஷீத் உள்ளிட்டோரை பயன்படுத்தி சோதனை செய்யலாம்.
6 பவுலர்கள் தேவையா?
அதுமட்டுமல்லாமல் 6 பவுலர்களுடன் களமிறங்காமல் ஒரு ஸ்பின்னரை வெளியில் அமர வைத்து கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் களமிறங்கி விளையாடலாம். டெல்லி அணியுடனான போட்டியில் முகேஷ் சவுத்ரி வீசிய 4 ஓவர்களை அஸ்வின், ஜடேஜா மற்றும் நூர் அஹ்மத் ஆகிய 3 பேரால் வீசியிருக்க முடியும். இதனால் முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் வந்திருந்தால், சரியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications