நம்பர் 4ல் ஜடேஜா களமிறங்குவதற்கு காரணம் என்ன? சூசகமாக தோனி அளித்த பதில்.. இனி சிக்கல் இருக்காது!
சென்னை: சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இரு ஆல்ரவுண்டர்களும் நம்பர் 4 மற்றும் நம்பர் 5ல் விளையாடுவதற்கு பின்னுள்ள காரணம் என்ன, சிவம் துபே மற்றும் டிவால்ட் பிரெவிஸ் ஆகியோர் இருந்த போதும், தோனி என்ன காரணத்திற்காக அஸ்வின் மற்றும் ஜடேஜாவை முன்னிலைப்படுத்துகிறார் என்பதையும் பார்க்கலாம்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்துள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு கடைசி 4 ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே சேர்த்தது காரணமாக அமைந்தது. கடைசி நேரத்தில் வந்த தோனி 17 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிவம் துபேவும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

சிஎஸ்கே அணியின் இந்த தோல்விக்கு 7 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்ததே முக்கிய காரணம். ஏனென்றால் விக்கெட் இழந்துவிடுவோம் என்ற பயத்திலேயே சிவம் துபே அட்டாக் செய்ய தாமதித்து வந்தார். ஏனென்றால் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் நம்பர் 4 மற்றும் நம்பர் 5 பேட்டிங் வரிசையில் களமிறங்கி சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர்.
கடந்த சில போட்டிகளாகவே தோனி இப்படியான யுக்தியை பின்பற்றி வருகிறார். ஜடேஜாவின் ஸ்ட்ரைக் ரேட்டிற்கு அவரை நம்பர் 4 மற்றும் நம்பர் 5ல் விளையாட வைப்பது கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமம் என்றே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஜடேஜாவால் ஸ்பின்னர்களை ஒருநாளும் அட்டாக் செய்ய முடியாது. அதேபோல் மிட் ஆன் மற்றும் மிட் ஆஃப் திசைகளில் மட்டுமே அவரால் பவுண்டரிகளை அடிக்க முடியும்.
இதனையறிந்தும் தோனி எதற்காக ஜடேஜாவை நம்பர் 4 மற்றும் நம்பர் 5ல் களமிறக்கி வருகிறார் என்பதே ரசிகர்களின் சந்தேகமாக உள்ளது. அதாவது அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியில் செய்ய வேண்டிய மாற்றங்களை தோனி இப்போதே அறிய விரும்புகிறார். ஜடேஜாவுக்கு கிட்டத்தட்ட 36 வயதாகி இருக்கும் சூழலில், அவரின் பேட்டிங்கை சோதிக்கவே வாய்ப்புகளை தோனி அளித்து வருவதாக பார்க்கப்படுகிறது.
ஆயுஷ் மாத்ரே, ருதுராஜ் கெய்க்வாட், உர்வில் படேல், டிவால்ட் பிரெவிஸ் மற்றும் சிவம் துபே ஆகிய 5 பேட்ஸ்மேன்கள் சிஎஸ்கே அணிக்கு தயாராகிவிட்டனர். அடுத்த சீசனில் தரமான ஒரு ஃபினிஷரை சிஎஸ்கே அணி கண்டறிய வேண்டும். ஒருவேளை டிவால்ட் பிரெவிஸ் மற்றும் சிவம் துபே ஆகியோரால் ஃபினிஷ் செய்ய முடிந்தால், நல்ல மிடில் ஆர்டர் வீரரை வாங்கலாம்.
இதனை உறுதி செய்து கொள்ளவே ஜடேஜாவுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தோனி அடுத்த சீசனில் களமிறங்குவதற்கு நிச்சயம் வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. நேற்றைய ஆட்டத்தில் கூட இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டிய அவர், அடுத்த சீசனுக்கான பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டேன் என்று தோனி சூசகமாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications