கன்சிஸ்டன்சினா என்ன தெரியுமா.. சாய் சுதர்சன் ஆட்டத்தை பாருங்க.. அடுத்த விராட் கோலி ரெடி!
லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் சாய் சுதர்சன் 37 பந்துகளில் 56 ரன்களை விளாசி அசத்தி இருக்கிறார். இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்களை விளாசியுள்ள சாய் சுதர்சன், 329 ரன்களை விளாசி ஆரஞ்ச் கேப் ரேஸில் முதலிடத்தில் இருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் சாய் சுதர்சன் - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இருவரும் குஜராத் அணியின் ஸ்கோரை டாப் கியரில் உயர்த்தினர்.

10வது அரைசதம்
இதனால் குஜராத் அணியின் ஸ்கோர் 12 ஓவர்களில் 120 ரன்களை எட்டியது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 38 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து தமிழக வீரரான சாய் சுதர்சன் 37 பந்துகளில் ஒரு சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 56 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் அடிக்கும் 10வது அரைசதம் இதுவாகும்.
காயத்தில் இருந்து கம்பேக்
அதுமட்டுமல்லாமல் இந்த சீசனுக்கு முன்பாக சாய் சுதர்சன் காயத்தில் சிக்கி தவித்தார். அறுவை சிகிச்சைக்கு பின் என்சிஏவில் சில மாதங்கள் பணியாற்றிய அவர், எப்படி பேட்டிங் செய்வார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் முதல் போட்டியிலேயே 41 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து அசத்தினார்.
ஆரஞ்ச் கேப் ரேஸ்
இந்த ஐபிஎல் தொடரில் மொத்தமாக 6 போட்டிகளில் ஆடியுள்ள சாய் சுதர்சன் 4 அரைசதங்கள் உட்பட 329 ரன்களை குவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாகவே சாய் சுதர்சனின் கன்சிஸ்டன்சி பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு சீசனிலும் அவரின் அதிரடி ஆட்டமும் அடுத்த கட்டத்திற்கு உயர்ந்து வருகிறது.
கன்சிஸ்டன்சி
ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் தரமான கிரிக்கெட் ஷாட்கள் மூலமாக ரன்களை குவிப்பது எப்படி என்பதை சாய் சுதர்சன் விரைவாக கற்றிருக்கிறார். அதனுடன் கன்சிஸ்டன்சியும் இணைந்திருப்பதால், விரைவில் இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக சாய் சுதர்சன் உருவெடுப்பார் என்று பார்க்கப்படுகிறது.
தமிழக வீரர்
விராட் கோலி இத்தனை ஆண்டுகளாக கன்சிஸ்டன்சியாக விளையாடி வருவதை போலவே, ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சனும் கன்சிஸ்டன்சியுடன் விளையாடி வருகிறார். இதனால் முரளி விஜய், தினேஷ் கார்த்திக்கிற்கு பின் தமிழ்நாட்டில் இருந்து மிகப்பெரிய பேட்ஸ்மேனாக சாய் சுதர்சன் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே சாய் சுதர்சனை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்துள்ளன.












Click it and Unblock the Notifications