அந்த ஒரு ஓவர்.. உயிரை கையில் பிடித்திருந்த ரசிகர்கள்.. எழுந்து நின்ற தருணம்! இந்தியா வென்றது எப்படி?
மும்பை: மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, முதன்முறையாக உலகக் கோப்பை பட்டத்தை வென்றுள்ளது. ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்க அணிக்கு ஆதரவாக சென்ற ஆட்டத்தை.. இந்திய மகளிர் அணி தங்கள் பக்கம் இழுத்து வந்து திக்திக் என்று சென்ற ஆட்டத்தில் கோப்பையை தட்டிப்பறித்து உள்ளது.
2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு, இது இந்திய அணியின் மூன்றாவது உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஆகும். இந்த முறை தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய கிரிக்கெட்டில் ஒரு பொற்கால அத்தியாயத்தை ஹர்மன்ப்ரீத் அணி எழுதியுள்ளது.

ஹர்மன்ப்ரீத் அணி சாதனை
பல ஆண்டுகளாக எதிர்பார்த்த இந்த வெற்றி, இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எவரெஸ்ட் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இந்த 13வது உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றி, அவர்களுக்கு நான்காவது அணியாகப் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியா (7), இங்கிலாந்து (4), மற்றும் நியூசிலாந்து (1) ஆகிய அணிகளுடன் வெற்றியாளர் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.
இந்திய அணி பேட்டிங்
நேரு முதலில் பேட் செய்த இந்திய அணி, உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரான 298/7 ரன்களைக் குவித்தது. பின்னர் தென்னாப்பிரிக்காவை 45.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து, வெற்றியைக் கைப்பற்றியது.
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட்டின் 98 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தாலும், தீப்தி ஷர்மா (55 ரன்கள் மற்றும் 5/39 விக்கெட்டுகள்) மற்றும் ஷஃபாலி வர்மா (87 ரன்கள் மற்றும் 2/36 விக்கெட்டுகள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டம் இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தது.
தீப்தி மற்றும் ஷஃபாலி ஆகியோரின் தரமான ஆட்டமே இந்த தொடரில் இந்தியாவின் வெற்றிக்குக் முக்கிய காரணம். தீப்தி, தனது நிலையான ஆட்டத்தால் இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை (21) கைப்பற்றி, சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
மறுபுறம், ஷஃபாலி வர்மாவின் கம்பேக் இந்திய அணிக்கு சாதகமாக மாறியது. ப்ரத்திகா ராவல் காயம் காரணமாக நீக்கப்பட்டதால், அணியில் சேர்க்கப்பட்ட ஷஃபாலி, சில வாரங்களுக்கு முன்பு வரை ஹரியானாவுக்காக உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடிக்கொண்டு இருந்தார்.. 21 வயதான இளம் வீராங்கனை ஷஃபாலி, நேற்று 84 பந்துகளில் 87 ரன்கள் குவித்து, இரண்டு முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தி, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இது அவரது முதிர்ச்சியான ஆட்டத்திற்கு ஒரு சான்றாகும்.
ஷஃபாலி தரமான ஆட்டம்
ஷஃபாலியின் கம்பேக் அணிக்கு பெரிய அளவில் சாதகமாக மாறியது. ஸ்மிருதி மந்தனாவுடன் (45 ரன்கள்) இணைந்து 104 ரன்கள் குவித்து சிறப்பான தொடக்கத்தை அளித்தார். நேற்று இரண்டு மணிநேர மழை காரணமாக ஆட்டம் தடைபட்ட பிறகு, தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களைத் இந்தியர் வீராங்கனைகள் திணறடித்தனர்.
மந்தனாவின் அரை சதம் தவறினாலும், அவர் இந்தத் தொடரில் 434 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இது மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் எந்த ஒரு இந்திய வீராங்கனையும் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். இதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடங்கும்.
ஜெமிமா ரோட்ரிகஸ்
அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றதில் முக்கியப் பங்காற்றிய ஜெமிமா ரோட்ரிகஸ், நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆட முயற்சித்தார். ஆனால் 30வது ஓவரில் கேப்டன் லாரா வோல்வார்ட்டின் சிறப்பான கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். இரண்டு முக்கியமான வீராங்கனைகள் ஆட்டமிழந்ததால், இந்திய அணியின் நம்பிக்கைகள் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் மீது இருந்தன. ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக விளையாடவில்லை.
தென்னாப்பிரிக்கா பேட்டிங்
தென்னாப்பிரிக்கா அதன்பின் பேட் செய்யத் தொடங்கியது. டஸ்மின் பிரிட்ஸ் (23) மற்றும் வோல்வார்ட் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தனர். ஆனால் அமன்ஜோத் கவுரின் நேரடி ஹிட் மூலம் தென்னாப்பிரிக்கா அணியின் முதல் விக்கெட் வீழ்ந்தது. அதன்பிறகு இந்திய பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தைக் கூட்டினர்.
ஸ்ரீ சரணியின் துல்லியமான பந்துவீச்சில் அனெகே போஷ் ஆட்டமிழந்தார். பின்னர் ஷஃபாலியின் இரண்டு விக்கெட்டுகள் தென்னாப்பிரிக்காவின் மத்திய வரிசையை ஆட்டம் காண வைத்தன. அதிரடியாக சதம் அடித்த வோல்வார்ட் மட்டும் களத்தில் நின்று இந்திய அணிக்கு பிரஷர் போட்டார். பொதுவாக அவர் 100 ரன்களை கடந்தால் அடித்து ஆடக்கூடியவர். அப்படித்தான் நேற்று 100 ரன்கள் வரை நிதானமாக ஆடி அணிக்கு பிரஷர் போட்டார். இதனால் எங்கே ஆட்டம் கையைவிட்டு போகிறதோ என்று ரசிகர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருந்தனர்.
முக்கியமாக நேற்று இந்திய அணி அடுத்தடுத்து பல கேட்சுகளை மிஸ் செய்தது தென்னாபிரிக்கா அணிக்கு சாதகமாக மாறியது. ஆனால் 41.1 ஓவரில் அவர் தீப்தி சர்மா ஓவரில் அவுட் ஆனார். அதே ஓவரில் 4வது பந்தில் அடுத்த விக்கெட்டும் விழுந்தது. இந்த ஓவரில்தான் ஆட்டமே மாறியது. ஒரே ஓவரில் தீப்தி எதிரணியின் முதுகெலும்பை உடைத்தார். பின்னர், நாடின் டி க்லெர்க்கின் விக்கெட்டை வீழ்த்தி தனது ஐந்தாவது விக்கெட்டைப் பதிவு செய்தார்.
இதையடுத்து டவுன் ஆர்டர் அப்படியே சீட்டு கட்டு போல சரிய.. கடைசியில் வந்த கேட்சை கேப்டன் ஹர்மான்ப்ரீத் பிடிக்க.. இந்திய மகளிர் அணி முதல்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.












Click it and Unblock the Notifications