சாரி அக்சர் படேல்.. களத்திலேயே மன்னிப்பு கேட்ட ரோஹித் சர்மா.. சோகமான வீரர்கள்.. என்ன நடந்தது?
துபாய்: வங்கதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்சர் படேலிடம் கேப்டன் ரோஹித் சர்மா மன்னிப்பு கேட்டுள்ளார். அக்சர் படேல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த வாய்ப்பு அமைந்த நிலையில், ஜேக்கர் அலி கொடுத்த லட்டு கேட்சை ரோஹித் சர்மா தவறவிட்டார். இதனால் இந்திய அணி வீரர்களும் சோகத்தை வெளிப்படுத்தினர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷான்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் தேசிய கீதம் பாடப்பட்டு இரு அணிகளும் களமிறங்கினர். வங்கதேச அணிக்கு தன்சித் ஹசன் - சர்கார் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் சர்கார் டக் அவுட்டாகி வெளியேற, ஹர்சித் ராணா வீசிய 2வது ஓவரில் கேப்டன் ஷான்டோவும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால் வங்கதேச அணி 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் வந்த மெஹதி ஹசன் மிராஸ் 5 ரன்களில் வெளியேறினர்.
இதனால் வங்கதேச அணி நிதானமாக விளையாடியது. ஹிர்டாய் - - தன்சித் ஹசன் இருவரும் விக்கெட்டை கொடுக்க கூடாது என்று கவனமாக விளையாடினர். இதனால் கேப்டன் ரோஹித் சர்மா ஸ்பின்னரான அக்சர் படேலை அட்டாக்கில் கொண்டு வந்தார். அவர் வீசிய 2வது பந்திலேயே அதிரடியாக ஆடி வந்த தன்சித் ஹசன் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின் அனுபவ வீரரான முஷ்ஃபிகுர் ரஹிம் களம் புகுந்தார். இவருக்கு அதே பந்தை அக்சர் படேல் வீச, அப்படியே அதேபோல் முஷ்ஃபிகுர் ரஹிமும் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் அக்சர் படேலுக்கு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு அமைந்தது. இதனை புரிந்து கொண்டு கேப்டன் ரோஹித் சர்மா கூடுதலாக ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்லிப்பில் நிறுத்தி அட்டாக்கிங் ஃபீல்ட் செட் அமைத்தார்.
இந்த நிலையில் அக்சர் படேல் வீசிய ஜேக்கர் அலி பேட்டில் பட்டு எட்ஜாகி நேராக கேப்டன் ரோஹித் சர்மாவின் கைகளுக்கு சென்றது. ஒரு நொடியில் ரோஹித் சர்மா பிடித்துவிட்டதாக நினைத்து சக இந்திய வீரர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர். ஆனால் ரோஹித் சர்மா லட்டு கேட்சை தவறவிட, இந்திய வீரர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.
அந்த கேட்சை கோட்டைவிட்டதால், தரையில் கைகளை அடித்து ரோஹித் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். அப்போது அமைதியாக நின்று பார்த்து கொண்டிருந்த அக்சர் படேலிடம் நேரடியாக மன்னிப்பு கேட்டு ரோஹித் சர்மா அமைதிபடுத்தினார். வழக்கமாக ரோஹித் சர்மா இந்திய வீரர்களை அதிகளவில் திட்டி கொண்டே இருப்பார். ஆனால் அவர் செய்த தவறுக்கு உடனடியாக களத்திலேயே சாரி கேட்ட சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications