கவுண்டி கிரிக்கெட்.. சர்பராஸ் கான் நீக்கப்பட காரணம் என்ன? கருண் நாயர் தேர்வின் பின்னணி இதுதான்!
மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இந்திய அணியில் மிகப்பெரிய சர்ப்ரைஸாக கருண் நாயர் வரவும், சர்ஃபராஸ் கான் நீக்கமும் அமைந்துள்ளது.
அதாவது ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஒரு வாய்ப்பை கூட பெறாத சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் கருண் நாயர் கம்பேக் கொடுத்துள்ளார். இதில் சர்ஃபராஸ் கானின் இடத்தில்தான் கருண் நாயர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

சர்ஃபராஸ் கான் நீக்கம் ஏன்?
சர்ஃபராஸ் கான் நீக்கப்பட்டதற்கான காரணம் அவர் ஓய்வறை தகவல்களை வெளியிட்டார் என்பது அல்ல. அவரின் பேட்டிங் ஸ்டைல் என்றுதான் பார்க்கப்படுகிறது. அதாவது நம்பர் 4 பேட்டிங் வரிசையில் விளையாடக் கூடிய அவர், அதிரடியாக ரன்களை சேர்க்கும் திறன் கொண்டவர். ரஞ்சி டிராபி தொடரில் சர்ஃபராஸ் கான் ஆட்டம் எப்போதும் அதிரடியாகவே இருக்கும்.
பேட்டிங் ஸ்டைல்
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சர்ஃபராஸ் கான் 150 ரன்களை அதிரடியாகவே விளாசி தள்ளினார். தற்போது அந்த ஸ்டைல்தான் அவருக்கு பிரச்சனையாக திரும்பி இருக்கிறது. அதாவது இந்திய அணிக்கு ஒரு ரிஷப் பண்ட் போதும் என்று பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முடிவு செய்திருக்கிறார். ஏனென்றால் இரு வீரர்களுமே சூழலை கணக்கில் கொள்ளாமல் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள்.
கருண் நாயர் கம்பேக் காரணம்
இதனால் சர்ஃபராஸ் கான் நீக்கப்பட்டதாக தெரிய வருகிறது. அதேபோல் கருண் நாயர் கம்பேக் கொடுத்ததற்கான காரணம் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியது மட்டுமல்ல. அவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒப்பந்தம் கிடைக்காத போது, இங்கிலாந்தில் இருந்து வந்த கவுண்டி கிரிக்கெட் வாய்ப்பை ஏற்று கொண்டு, அங்கு சென்று தனது ஃபார்மை மீட்டெடுத்தார்.
இங்கிலாந்து அனுபவம்
நார்த்தெம்டன்ஷையர் அணிக்காக களமிறங்கிய கருண் நாயர் 14 இன்னிங்ஸில் ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 736 ரன்களை விளாசி தள்ளினார். அதேபோல் உள்ளூர் கிரிக்கெட்டிலும் வேறு மாதிரி ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருக்கான கதவுகள் இந்திய அணியில் திறக்கப்பட்டுள்ளது. சாய் சுதர்சனும் கவுண்டி கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கவனிக்கும் பிசிசிஐ
இதனால் விராட் கோலி, அஸ்வின் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாததால் இங்கிலாந்து மண்ணில் அனுபவம் கொண்ட வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், வீரர்கள் தங்களின் ஓய்வு நேரங்களில் என்ன செய்கிறார்கள் என்பதையும் இந்திய அணி நிர்வாகம் கவனித்து வருவதும் புரிந்து கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications