துபாய் போக முடியலனா என்ன? ஸ்டேடியம் பீலில் சென்னையிலேயே IND vs Pak போட்டியை பார்க்கலாம்.. எப்படி?
சென்னை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை நேரலையில் பார்ப்பதற்கு சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசண்ட் நகர் கடற்கரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கடற்கரையில் குவிந்து வருகின்றனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. வழக்கமாக இரு அணிகள் மோதினாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆட்டம் துபாய் மைதானத்தில் நடக்கவுள்ளது.

அங்கு பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிக்கு சரிக்கு சமமாக ரசிகர்களின் ஆதரவு இருக்கும். அதேபோல் 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு, இந்திய அணி பழிதீர்க்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால், பாகிஸ்தான் அணி தொடரில் இருந்தே நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் இந்திய அணி இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கும் சூழல் ஏற்படும். இதனால் பரபரப்பு மிகுந்த இந்த ஆட்டத்தில் யார் வெற்றிபெறுவார்கள் என்று இன்று காலை முதலே சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் நேரலையாக பார்க்க முடியும். என்னதான் வீட்டில் இருந்தவாறு பார்த்தாலும், நண்பர்களுடன் ரசிகர்களுடன் பார்க்கும் அனுபவம் வேறுதான். கிட்டத்தட்ட ஒரு திருவிழாவை போன்ற சூழல் நேரில் பார்க்கும் போது நிகழ்த்தப்படும். போட்டியின் ஒவ்வொரு பந்துக்கும் ரசிகர்களின் ரியாக்சனை பார்க்க முடியும்.
அந்த அனுபவத்தை உணர முடியும். இதற்காக தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் நினைவு இல்லத்திற்கு எதிரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை எல்இடி ஸ்க்ரீனில் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பெசண்ட் நகர் நகர் போலீஸ் பூத் அருகிலும் எல்இடி ஸ்க்ரீன் வாயிலாக நேரலை செய்யப்படுகிறது.
இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் வெயில் குறைந்த பின் மாலை நேரத்தில் சென்று கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்கலாம். இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், கடற்கரையில் மக்கள் இப்போது முதலே குவியத் தொடங்கியுள்ளனர். இந்த கூட்டம் மாலை நேரத்தில் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications