ஏழை குடும்பம்.. "உனக்கு அணியில் இடமில்ல".. ஒதுக்கப்பட்ட ஷஃபாலி.. இந்தியாவை வெற்றிபெற வைத்தது எப்படி?
சென்னை: இந்திய மகளிர் கிரிக்கெட்டில் ஷஃபாலி வர்மாவின் தரமான கம்பேக் ஆட்டம்தான் நேற்று இந்தியாவை முதன்முறையாக மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல காரணமாக மாறியது. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஷஃபாலியின் ஆட்டம் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது.
ஷஃபாலியின் கிரிக்கெட் பயணம்
வறுமையான குடும்பத்தில் இருந்து வந்து வந்த ஷஃபாலியின் கிரிக்கெட் பயணம் பல ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாகும். தனது 15 வயதிலேயே இந்தியாவுக்காக டி20ஐ போட்டிகளில் அறிமுகமான இவர், டி 20 போட்டிகளில் விளையாடிய மிக இளமையான இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். விரைவில் டி20ஐ போட்டியில் அரைசதம் அடித்த இளம் வீராங்கனையாகவும் ஆனார்.

2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ICC டி20ஐ பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்திற்கு உயர்ந்த ஷஃபாலி, தனது பயமில்லாத மற்றும் அதிரடியான ஆட்டத்தால் உலக அளவில் கவனிக்கப்பட்டார். . இருப்பினும், 2024-25 காலகட்டத்தில், ஒருநாள் போட்டிகளில் அவரது ஃபார்ம் சரிந்தது. இதனால், இந்தியத் தேர்வுக் குழு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை அணியிலிருந்து அவரை நீக்கியது.
அணியில் இருந்து நீக்கப்பட்ட ஷஃபாலி
தலைமைத் தேர்வாளர் நீட்டு டேவிட், இந்த முடிவு பார்ம், பேட்டிங், பிட்னஸ் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது என்று விளக்கினார். அனுபவம் வாய்ந்த பேட்டர் ஸ்மிருதி மந்தானா மற்றும் உள்நாட்டு, சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட இளம் வீராங்கனை பிரதிகா ராவல் ஆகியோரை இந்திய அணி துவக்க ஆட்டக்காரர்களாகத் தேர்வு செய்தது. இவர்களது சிறப்பான துவக்கங்கள் தேர்வு முடிவை உறுதிப்படுத்தின. இதனால் அணியில் ஷஃபாலி இடம்பெறுவது சிக்கலானது.
ஆனால் எதிர்பாராத ஒரு திருப்பம் அனைத்தையும் மாற்றியது. வங்கதேசத்திற்கு எதிரான இந்தியாவின் இறுதி லீக் போட்டியில், பிரதிகா ராவலுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டு, உலகக் கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டார். அரையிறுதி நெருங்கிய நிலையில், சிறப்பு துவக்க ஆட்டக்காரர் யாரும் இல்லாததால், இந்தியா மீண்டும் ஷஃபாலியைத் திரும்பிப் பார்த்தது.
ஷஃபாலி கம்பேக்
நீங்கள் ஒரு விஷயத்தை அதிகம் விரும்பினால் பிரபஞ்சம் அந்த விஷயத்தை உங்களுக்கு எப்படியாவது கொடுக்கும் என்பார்களே.. அப்படித்தான் ஷஃபாலிக்கு வாய்ப்பு தேடி வந்தது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஷஃபாலி மீண்டும் அணிக்குள் வந்தார். நம்பிக்கையுடன் துவங்கிய அவர், சில பவுண்டரிகளை அடித்தாலும், தனது அதிரடி துவக்கத்தை ஒரு பெரிய ஸ்கோராக மாற்றத் தவறினார். இறுதிப் போட்டிக்கு அவரது இடம் குறித்து விமர்சகர்களும் ரசிகர்களும் கேள்வி எழுப்பினர். ஆனால், நிர்வாகம் மீண்டும் அவருக்கு ஆதரவளித்தது.
அவர் பைனல் மேட்சில் நேற்று ஆடுவதே சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் கடைசியில், தனது வாழ்க்கையின் மிகப்பெரிய போட்டியில், ஷஃபாலி நேற்று தனது திறமையை நிரூபித்தார். 78 பந்துகளில் 87 ரன்கள் குவித்து, இந்தியாவுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தார். பின்னர், பந்துவீச்சிலும் தனது பங்களிப்பை அளித்தார். தென் ஆப்பிரிக்காவின் முக்கியமான பேட்டர்களான சுனே லூஸ் மற்றும் மரிசான் காப் ஆகியோரை 7 ஓவர்களில் 36 ரன்கள் மட்டும் கொடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.
இதனால் அவர் ஆட்ட நாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தனது முதல் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கோப்பையை வென்றது. இந்த வெற்றி இந்திய மகளிர் கிரிக்கெட்டில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் குறித்தது.
ஷஃபாலி பேச்சு
போட்டிக்குப் பிறகு, உணர்ச்சிவசப்பட்ட ஷஃபாலி தனது குடும்பத்தினர், அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தன்னை நிரூபிக்க கடவுள் தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தார் என்றும், தான் அமைதியாகவும், தனது திறமைகளை நம்பியும் இருந்ததாகவும் அவர் கூறினார். மேலும், கடினமான காலகட்டங்களில் தனது பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் சகோதரர் தொடர்ந்து ஆதரவளித்ததாகக் குறிப்பிட்டார்.
அணி ஆதரவு முக்கியமானது. ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் மற்ற அணி வீரர்கள், தனது இயல்பான ஆட்டத்தை நம்பி, தன்னம்பிக்கையுடன் இருக்குமாறு நினைவூட்டினர். சச்சின் டெண்டுல்கரை மைதானத்தில் பார்த்தபோது ஒரு சிறப்பு ஊக்கம் கிடைத்தது. சச்சினிடம் அடிக்கடி பேசுகிறேன்., அவரது வழிகாட்டுதலில் இருந்து உத்வேகத்தையும் நம்பிக்கையையும் பெறுகிறேன். இறுதிப் போட்டியில் அவரைப் பார்த்தது, சிறப்பாகச் செயல்பட கூடுதல் உந்துதலை அளித்தது என்று கூறினார்.
இந்தியாவின் வெற்றியும் ஷஃபாலியின் தரமான கம்பேக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றாக நினைவுகூரப்படும்.












Click it and Unblock the Notifications