அடப்பாவிகளா.. சொன்ன மாதிரியே அபிஷேக் சர்மாவை முதல் ஓவரில் தட்டி தூக்கிய பாகிஸ்தான்.. 2வது டக் அவுட்!
கொழும்பு: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி வெளியேறி இருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் அணி வீரர்கள் அபிஷேக் சர்மாவை மோசமாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது அபிஷேக் சர்மா டக் அவுட்டாகியது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா பவுலிங்கை தேர்வு செய்தார். அப்போது அவருடன் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்க மறுத்தார். இது இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்திற்கு நெருப்பை பற்ற வைத்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணி தரப்பில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டது. சஞ்சு சாம்சன் மற்றும் அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டு அபிஷேக் சர்மா மற்றும் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர். இதன்பின் அபிஷேக் சர்மா - இஷான் கிஷன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரை வீச ஷாகின் அப்ரிடி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, திடீரென சல்மான் அலி ஆகா வந்தார்.
முதல் ஓவரிலேயே ஸ்பின்னர் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டது ஆச்சரியத்தை கொடுத்தது. இந்த ஓவரின் 2வது பந்தில் இஷான் கிஷன் ஒரு ரன் எடுத்து, அபிஷேக் சர்மாவுக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார். ஆனால் ஸ்பின்னரின் பந்தை எதிர்கொள்ள அபிஷேக் சர்மா தடுமாறினார். தொடர்ச்சியாக 3 பந்துகள் டாட் பாலாக மாறியதால், அபிஷேக் சர்மாவுக்கு அழுத்தம் ஏற்பட்டது.
இதனை பயன்படுத்தி சல்மான் அலி ஆகா பந்தை கொஞ்சம் ஸ்லோவாக வீசினார். அதனை மிட் ஆன் திசையில் தூக்கி அடிக்க, அது நேராக ஷாகின் அப்ரிடி கைகளில் சென்று விழுந்தது. இதனால் அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். ஏற்கனவே அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றினார்.
இந்தப் போட்டிக்கு முன்பாக அபிஷேக் சர்மாவை பாகிஸ்தான் அணியின் வீரர்களும், ஜாம்பவான்களும் குறி வைத்தனர். அவரை மனதளவில் தளர வைக்க சில முயற்சிகள் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய ஜாம்பவான்கள் பதிலடி கொடுத்த போது, போட்டியில் அபிஷேக் சர்மா டக் அவுட்டாகியது ரசிகர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications