ஸ்பின்னர்களே இல்லை.. ஹேசல்வுட் பந்தில் தப்பித்தால் போதும்.. சிஎஸ்கே வெற்றியை யாரும் தடுக்க முடியாது!
சென்னை: 18வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9வது லீக் போட்டியில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் விளையாடுகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டி என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இரு அணிகளுமே தங்களின் முதல் போட்டியில் வென்றிருப்பதால், சேப்பாக்கம் மைதானத்தில் எந்த அணி ஆதிக்கம் செலுத்தும் என்று ரசிகர்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த ஆண்டு ஆர்சிபி அணியிடம் அடைந்த தோல்விக்கு சிஎஸ்கே அணி பழிதீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சிஎஸ்கே அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆர்சிபி அணி வீரர்கள், கோப்பையை வென்றதற்கு நிகரான கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சிஎஸ்கே அணி வீரர்களுடன் கைகுலுக்கவே நீண்ட நேரமானது. இதனால் தோனி ஆர்சிபி பயிற்சியாளர்களுடன் கைகுலுக்கிவிட்டு ஓய்வறை சென்றார்.

இதனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பதிலடியை கொடுப்பார் என்று நம்பி இருக்கின்றனர். ஆர்சிபி அணியை பொறுத்தவரை ஹேசல்வுட்டை சுற்றிதான் பவுலிங் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவரின் பவர் பிளே ஓவர்களில் மட்டும் விக்கெட் கொடுக்காமல் சிஎஸ்கே அணி பேட்டிங் ஆடினாலே, அடுத்தடுத்து வரும் பவுலர்களை எளிதாக விளாசி தள்ள முடியும். அவரும் சேப்பாக்கம் மைதானத்தில் ஆடியவர்.
அதேபோல் க்ருணால் பாண்டியாவை பொறுத்தவரை கொஞ்சம் வேகமாக பந்தை வீசக் கூடியவர் என்பதால், அவரிடம் சிவம் துபே உள்ளிட்டோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சேப்பாக்கம் மைதானத்தில் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருப்பதோடு, கொஞ்சம் பந்து நின்று வரும். இதனால் க்ருணால் பாண்டியா பவுலிங்கில் பேட்ஸ்மேன்கள் அதிகமாக ஏமாறுவதற்கு வாய்ப்புள்ளது.
அதுமட்டுமல்லாமல் சுயாஷ் சர்மாவை தவிர்த்து வேறு ஸ்பின்னர் இல்லாததால், அவரை தொடக்கம் முதலே அட்டாக் செய்ய வேண்டும். 2024ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் கூட்டணி பெரிய ஸ்கோரை பதிவு செய்யவே இல்லை. இம்முறை ரச்சின் ரவீந்திரா - ராகுல் திரிப்பாட்டி கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கி இருக்கிறது.
முதல் போட்டியில் சொதப்பினாலும், இந்த போட்டியில் நிதானமாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினாலே போதுமானது. ஏனென்றால் சேப்பாக்கம் மைதானத்தில் 180 ரன்கள் வரை எளிதாக சேஸிங் செய்ய முடியும். அதனால் இம்முறை ராகுல் திரிப்பாட்டி கூடுதல் கவனமாக விளையாடி நல்ல தொடக்கம் கொடுத்தாலே, சிஎஸ்கே அணியின் வெற்றி உறுதியாகும்.












Click it and Unblock the Notifications