IPL 2025: ஐபிஎல் தொடருக்கு டாடா.. சொந்த ஊர் பறக்கும் வெளிநாட்டு வீரர்கள்.. இனிமே வர மாட்டாங்களாம்!
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒரு வாரத்திற்கு பிசிசிஐ ஒத்தி வைத்துள்ள நிலையில், இன்று இரவு வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்ப உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. இதனால் அடுத்த வாரம் ஐபிஎல் தொடர் தொடங்கவில்லை என்றால், பின்னர் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும், அவர்கள் தேசிய அணிக்கான பயிற்சிகளை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு பின் சூழல் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், அதன்பின் மத்திய அரசு, ஐபிஎல் உரிமையாளர்கள், பங்குதாரர்கள், ஸ்பான்சர்கள், ஒளிபரப்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசிக்கப்படவுள்ளது.

இதன்பின் அனைவரின் கருத்துகளை பெற்றுக் கொண்டு சூழல் சாதகமாக இருக்கும் பட்சத்தில், புதிய அட்டவணை மற்றும் மைதானங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஒரு வாரத்திற்கு மட்டும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாது என்று தெரிகிறது. ஆனால் ஒரு வாரத்திற்கு பின் ஐபிஎல் தொடர் தொடங்கினாலும், பல்வேறு சிக்கல்கள் உருவாகும் என்று பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 7 முதல் 8 வெளிநாட்டு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், அந்தந்த வீரர்கள் தொடர்புடைய கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐ நிர்வாகத்திடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை அனுப்பி வைக்க கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று இரவு வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் தங்களின் சொந்த நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று புறப்பட்ட பின், ஒரு வாரத்திற்குள் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கப்படவில்லை என்றால், பின்னர் இந்தியாவில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிய வந்துள்ளது.
அடுத்தடுத்து தேசிய அணிக்கான சுற்றுப்பயணத்தில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஆர்சிபி, மும்பை, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் ஐபிஎல் தொடரை இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே துபாயில் பிஎஸ்எல் தொடர் நடத்த திட்டமிட்டிருப்பதால், தென்னாப்பிரிக்காவில் நடத்த வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications