பஞ்சாப் ஐபிஎல் டீமோடு சேர்த்து பூஜை போட்ட ரிக்கி பாண்டிங்.. கொந்தளிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்!
இஸ்லாமாபாத்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர், நாளை அதாவது சனிக்கிழமை, தொடங்கவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தனது அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து பூஜை விழாவில் கலந்து கொண்டார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாகவும், ஆஸ்திரேலிய அணியை இரண்டு முறை உலகக் கோப்பை வெல்ல வைத்த கேப்டனாகவும் திகழ்ந்த ரிக்கி பாண்டிங், கடந்த செப்டம்பர் மாதம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அதிர்ஷ்டம் வர வேண்டும் என்பதற்காகவும், முதல் ஐபிஎல் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற நோக்கத்துடனும், இந்த பூஜை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இந்த பூஜையின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். கிரிக்கெட்டை மதத்துடன் கலப்பது சரியல்ல என்று அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு காரணம், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மதத்தை கடைப்பிடிப்பது தொடர்பாக இதற்கு முன்பு எழுந்த சர்ச்சைகளே.
தொழுகை நடத்திய ரிஸ்வான்
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த பின்னர் மைதானத்தில் தொழுகை (நமாஸ்) செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இதுகுறித்து ஐசிசி தலைவருக்கு புகார் அளித்தார். ரிஸ்வானின் இந்த செயல்பாடு விளையாட்டின் உணர்வுக்கு எதிரானது என்றும், அவர் வேண்டுமென்றே தனது மதத்தை வெளிப்படுத்தியதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பொய் சொல்வதாக குற்றச்சாட்டு
அதுமட்டுமின்றி, 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்விக்கு பிறகு, வீரர் அகமது ஷேசாத், முகமது ரிஸ்வான் "மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவதாக" விமர்சித்தார். அணியின் உடற்தகுதி குறித்து பொய் சொல்வது மற்றும் களத்தில் நடிப்பதற்கு எந்த மதம் கற்றுக்கொடுக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர் சர்ச்சையில் ரிஸ்வான்
மேலும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின்போது, வீரர் இமாம்-உல்-ஹக், முகமது ரிஸ்வான் குறித்து பேசுகையில், அவர் வீரர்களுக்கு தொழுகை செய்ய உதவுவது, தொழுகை நேரங்களுக்கான வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்குவது மற்றும் முஸ்லிம் அல்லாத ஊழியர்களை வீரர்கள் அறையில் அனுமதிக்காதது போன்ற கிரிக்கெட் சாராத விஷயங்களை குறிப்பிட்டது பலரின் புருவங்களை உயர்த்தியது.
Ricky Ponting doing Pooja at New PCA stadium ahead of IPL 2025. ♥️🙏 [📸: Punjab Kings] pic.twitter.com/p5Q8bNcisr
— Johns. (@CricCrazyJohns) March 20, 2025
பாகிஸ்தான் ரசிகர்கள் கேள்வி
தற்போது ரிக்கி பாண்டிங் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியின் பூஜை வீடியோவை பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள், தங்கள் நாட்டு வீரர்கள் மதத்தை கடைப்பிடித்ததற்காக தொடர்ந்து விமர்சிக்கப்படும் நிலையில், மற்றவர்கள் செய்யும் போது யாரும் கண்டுகொள்ளாதது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஒருதலைப்பட்சமான செயல் என்றும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். "ரிஸ்வான் மசூதிக்கு சென்றாலே பிரச்சினை செய்பவர்கள், இப்போது என்ன சொல்வார்கள்?" என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு ரசிகர், "நாங்கள் செய்தால் மதம் கலப்பு, ஆனால் அவர்கள் செய்தால் விளையாட்டு உணர்வு!" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
ஆக, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ரிக்கி பாண்டிங் நடத்திய பூஜையை விமர்சிப்பதற்கு காரணம், இதற்கு முன்பு தங்கள் நாட்டு வீரர்கள் மதரீதியான செயல்களில் ஈடுபட்டபோது எழுந்த எதிர்ப்புகளும், தற்போது அதற்கு காட்டப்படும் வேறுபட்ட அணுகுமுறையுமே ஆகும். அதேநேரம் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் ரிக்கி பாண்டிங் சிரத்தையோடு பூஜையில் பங்கேற்றதை பலரும் பாராட்டி வருகிறார்கள். மத ஒற்றுமையை மேம்படுத்துவதாகவும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications