செப்டம்பரில் ஐபிஎல் தொடர் நடத்த முடியுமா? பிசிசிஐ முன் நிற்கும் வாய்ப்புகள் என்ன? முழு அலசல்!
மும்பை: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதியுடன் நிறுத்த முடிவு எடுத்திருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதுதொடர்பாக பிசிசிஐ விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நடப்பு ஐபிஎல் தொடரை சிறப்பாக நடத்தி முடிக்க பிசிசிஐ முன் இருக்கும் வாய்ப்புகள் குறித்து பார்க்கலாம்.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதியுடன் நிறுத்த பிசிசிஐ முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருவதன் காரணமாக, பாதுகாப்பு காரணங்களுக்கான இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஏனென்றால் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டால், கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டிய தேவை ஏற்படும்.

பாதுகாப்பு முக்கியம்
ஏற்கனவே விமான நிலையம், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஐபிஎல் தொடருக்கு பாதுகாப்பு அளிப்பது கூடுதல் சிக்கலானது. அதேபோல் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பில் பிசிசிஐ ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனால் ஐபிஎல் தொடரை பாதியிலேயே நிறுத்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
துபாயில் நடத்த முடியாது
ஐபிஎல் தொடரில் இதுவரை 58 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் 12 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மட்டுமே நடத்தப்பட வேண்டியதாக உள்ளது. இதற்கு இன்னும் 2 வார காலம் போதுமானது என்று பார்க்கப்படுகிறது. உடனடியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் ஐபிஎல் தொடரை மாற்ற முடியாது. ஏனென்றால் துபாயில் பிஎஸ்எல் தொடரை நடத்த திட்டமிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வீரர்களின் சிக்கல்
அதேபோல் வெளிநாட்டு வீரர்கள் சிலர் தங்களது கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும் தகவல் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் நிர்வாகங்கள் தங்களின் வீரர்களை பத்திரமான திருப்பி அனுப்ப பிசிசிஐ-க்கு அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் ஐபிஎல் தொடரை பின்னர் நடத்த முடியுமா என்ற பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.
கொரோனா பரவலின் போது ஐபிஎல்
அதாவது 2020ஆம் ஆண்டு கொரோனா பரவலின் போது எப்படி பாதியோடு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டதோ, அப்படி இம்முறை நடத்த ஆலோசித்து வருகிறது. ஆனால் அப்போது கொரோனா பரவல் இருந்ததால், அனைத்து வெளிநாட்டு அணிகளும் கொஞ்சம் நிதானமாக தங்களின் சுற்றுப்பயணத்தை திட்டமிட்டு வந்தன.
செப்டம்பரில் நடத்த வாய்ப்பு?
ஆனால் இம்முறை அனைத்து அணிகளுக்கும் ஜூன் மாதம் முதல் அடுத்தடுத்து கிரிக்கெட் தொடர்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாட உள்ளது. பிசிசிஐ நிர்வாகத்திற்கு இருக்கும் ஒரேயொரு வாய்ப்பு என்னவென்றால், ஆசியக் கோப்பை நடத்த திட்டமிடப்பட்டிருந்த செப்டம்பர் மாதம்தான்.
மீண்டும் சிக்கல்
ஆனால் செப்டம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் சுற்றுப்பயணத்தை திட்டமிட்டுள்ளன. இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியா அணி ஆஷஸ் தொடருக்கு தயாராகும். இதனால் வெளிநாட்டு வீரர்கள் செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை விளையாட வர வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications