KKR vs RCB: கொல்கத்தாவுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படுமா? விதிகள் என்ன?
கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கேகேஆர் - ஆர்சிபி அணிகள் மோதவுள்ள நிலையில், கொல்கத்தாவில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்தால், ஐபிஎல் நிர்வாகம் என்ன முடிவு எடுக்கும் என்பதையும், 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்துவதற்கான விதிகள் என்ன என்பதையும் பார்க்கலாம்.
18வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் இன்று மாலை தொடங்கவுள்ளது. கொல்கத்தா மைதானத்தில் நடக்கும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் கொல்கத்தா - பெங்களூர் அணிகள் மோதின.

அந்தப் போட்டியில் கேகேஆர் அணிக்காக ஆடிய பிரண்டன் மெக்கல்லம் 73 பந்துகளில் 13 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 158 ரன்களை விளாசி தள்ளினார். இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி வெறும் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் கேகேஆர் அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியை ரசிகர்கள் இன்றும் நினைவில் வைத்துள்ளனர்.
2008ஆம் ஆண்டுக்கு பின் ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் கேகேஆர் - ஆர்சிபி அணிகள் மீண்டும் மோதுகின்றன. இதனால் 18 ஆண்டுகளுக்கு முன் அடைந்த மோசமான தோல்விக்கு, ஆர்சிபி அணி பதிலடி கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது. நடப்பு சாம்பியனாக இருந்தாலும், இம்முறை கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயரே ரீடெய்ன் செய்யப்படவில்லை.
அஜிங்கியா ரஹானே தலைமையில் கேகேஆர் அணி களமிறங்க உள்ளதால், அந்த அணியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனான ரஜத் பட்டிதார் தலைமையில் களமிறங்குகிறது. இம்முறை இந்திய வீரர்களை கொண்டு ஆர்சிபி அணி கட்டமைக்கப்பட்டுள்ளதால், கோப்பையை வெல்லக் கூடிய அணியாக பார்க்கப்படுகிறது.
ஆனால் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் போட்டி நடக்குமா என்பதே ரசிகர்களின் சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் நேற்று இரவு கூட கொல்கத்தாவில் கனமழை பெய்து, மைதானம் முழுக்க தார்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தது. வீரர்களின் பயிற்சியும் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் இன்று கொல்கத்தாவில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் விதிகளின்படி இரவு 10.56 மணி வரை நடுவர்கள் காத்திருக்கலாம். அதாவது கடைசி வாய்ப்பாக 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தக் கூட வாய்ப்புகள் உள்ளது. ஆனால் 10.56 மணி வரை மழை நிற்கவில்லை என்றால், ஆட்டம் ரத்து செய்யப்படும். ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சிறப்பான கால்வாய் வசதிகள் இருப்பதால், மழை பெய்தாலும் மைதானத்தில் தண்ணீர் நிற்காது என்பது ரசிகர்களிடையே நிம்மதியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications