சன்ரைசர்ஸ் கேப்டனாகும் இஷான் கிஷன்.. தரமான முடிவை எடுத்த காவ்யா மாறன்.. இனி கம்மின்ஸ் சேவை தேவையா?
மும்பை: ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் கம்மின்ஸ் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ள சூழலில், ஐதராபாத் அணியின் கேப்டனாக இஷான் கிஷனை நியமிக்க ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஜார்க்கண்ட் அணியை வழிநடத்திய அனுபவம் இருப்பதால், இஷான் கிஷன் கேப்டன் ரோலுக்கு சரியாக இருப்பார் என்றும் கணிக்கப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 28ஆம் தேதி பெங்களூர் மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் மற்றும் ஆர்சிபி அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆகிய இருவரும் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.

இவர்கள் இருவருமே டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்காகவும் விளையாடவில்லை. ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் கம்மின்ஸ் ஒரு சில போட்டிகளில் மட்டுமே ஆடி இருந்தார். இதன்பின் காயம் காரணமாக கம்மின்ஸ் சிகிச்சையில் இருந்தார். அந்த காயத்தில் இருந்து முழுமையாக விடுபடாததால், ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் கம்மின்ஸ் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
இதனால் ஐதராபாத் அணியின் கேப்டன்சியை வேறு யாரிடம் கொடுக்கலாம் என்று காவ்யா மாறன் மற்றும் டேனியல் வெட்டோரி ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி இருந்தார். அவர் இந்திய அணியில் இடம்பிடிக்க காரணமாக அமைந்தது சையத் முஷ்டாக் அலி தொடர் தான்.
சையத் முஷ்டாக் அலி தொடரில் ஜார்க்கண்ட் அணியை சிறப்பாக வழிநடத்திய இஷான் கிஷன், பேட்டிங்கிலும் பட்டையை கிளப்பி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற காரணமாக அமைந்தார். தற்போதும் இஷான் கிஷன் சிறந்த ஃபார்மில் இருப்பதால், அவரை கேப்டனாக நியமிக்கலாமா என்ற ஆலோசனை நடப்பதாக தெரிகிறது.
ஒருவேளை இஷான் கிஷன் கேப்டன்சியை சிறப்பாக மேற்கொள்ளும் பட்சத்தில், ஐதராபாத் அணிக்கு இந்திய வீரரை அடுத்த சீசனில் கேப்டனாக நியமிக்கும் வாய்ப்பு உருவாகும். அதன் மூலமாக ஐதராபாத் அணி அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்டும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் காவ்யா மாறன் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications