ரூ.1,280 கோடி.. ஐசிசி தொடருக்காக புதுப்பிக்கப்பட்ட பாகிஸ்தான் மைதானம்.. அப்படி என்ன சிறப்பு?
லாகூர்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக புதுப்பிக்கப்பட்டுள்ள கடாஃபி மைதானத்தின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம். மொத்தமாக கடாஃபி மைதான புதுப்பிப்பு பணிகளுக்கு மட்டும் ரூ.770 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டுமான பணிகளுக்கு செலவிடப்பட்ட தொகையில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
8 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மண்ணில் தொடங்கியுள்ளது. ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட்டாலும், முழு ஏற்பாடுகளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே மேற்கொண்டுள்ளது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய் மைதானத்தில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.

இந்த ஆட்டம் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் நடக்கிறது. ஐசிசி தொடர் நடத்தப்படுவதால், பாகிஸ்தானில் உள்ள 3 மைதானங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் லாகூரில் உள்ள கடாஃபி ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்டுள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. ஏற்கனவே 3 மைதானங்களை புதுப்பிப்பதற்கு மட்டும் ரூ.1,280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில் லாகூரில் உள்ள கடாஃபி ஸ்டேடியத்திற்கு மட்டும் ரூ.770 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெவிலியனை கான்க்ரீட் அமைப்பதற்கு மட்டும் ரூ.110 கோடியும், கட்டடப் பணிகளுக்காக ரூ.125 கோடியும், 2 எல்ஈடி ஸ்க்ரீனுக்கு மட்டும் ரூ.33 கோடியும் , 480 எல்ஈடி லைட்களுக்கு மட்டும் ரூ.52.3 கோடியும், ரூ.93 கோடி மற்ற பணிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது மைதானம் புதுப்பிக்கப்பட்டிருப்பதால் கடாஃபி ஸ்டேடியத்தில் நேரில் அமர்ந்து 34 ஆயிரம் ரசிகர்கள் பார்க்கலாம் என்று தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட 13,500 ரசிகர்கள் கூடுதலாக இனி நேரில் வந்து பார்க்கலாம். அதேபோல் மைதானத்தில் அமர்ந்து போட்டியை பார்க்கும் ரசிகர்கள், 20 அடி அருகில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இன்னொரு பக்கம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் ஆங்கிள்களும் மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல் மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள சீட்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் 20 சொகுசு பாக்ஸ்-கள் விஐபிக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கடாஃபி மைதான புதுப்பிப்பு பணிகளில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் ஐசிசி எதிர்பார்ப்புக்கு ஏற்ப பணிகள் விரைவாகவும் நடக்கவில்லை.
இந்தியாவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட நரேந்திர மோடி மைதானம் ரூ.800 கோடி செலவாகியது. ஆனால் பாகிஸ்தான் கடாஃபி மைதானம் புதுப்பிப்பு பணிகளுக்கு மட்டும் ரூ.770 கோடி செலவாகி இருப்பது பேசுபொருளாகியது. இதற்கான செலவுகள் ஐசிசி கொடுத்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications