"தம்பி பந்தை எறியக்கூடாது" பீதியை கிளப்பும் பதிரானாவின் பவுலிங் ஆக்ஷன்.. கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள்
சென்னை: சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா மீண்டும் பழைய பவுலிங் ஆக்ஷனுக்கு திரும்பியுள்ளார். அதுவும் கடந்த ஆண்டை விடவும் பதிரானாவின் ரிலீஸ் பாய்ண்ட் இன்னும் கீழே சென்றிருப்பதால், அவர் மீது பேட்ஸ்மேன்கள் புகார் அளிக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடர் அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. இம்முறை முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடவுள்ளது. அதன்பின் 2வது நாள் நடக்கும் 3வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளதால், இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் மெகா ஏலத்திற்கு பின் நடக்கும் ஆட்டம் என்பதால், சிஎஸ்கே அணி குழுவாக எப்படி இணைந்து விளையாடும் என்று ரசிகர்களிடையே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இம்முறை சிஎஸ்கே அணியின் பவுலிங் லைன் அப் இளம் நட்சத்திர வீரரான பதிரானாவை முன்னிலைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணி அவரை ரூ.13 கோடிக்கு தக்க வைத்து கொண்டது. சில நாட்களுக்கு முன்பாக சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் பதிரானா இணைந்து கொண்டார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் சோஷியல் மீடியா பக்கத்தில் பதிரானா பவுலிங் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ சிஎஸ்கே ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் அவர் மீண்டும் பழைய பவுலிங் ஆக்ஷனில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டு அவரின் பவுலிங் ஆக்ஷன் அதிகளவு காயத்தை கொடுத்ததால், சில மாற்றங்களை செய்தார். அதாவது அவரின் ரிலீஸ் பாய்ண்ட் கொஞ்சம் மேலே உயர்த்தப்பட்டது. ஆனால் பதிரானாவின் பவுலிங் ஆக்ஷன் மாற்றம் செய்யப்பட்ட பின், அவரால் ஜொலிக்க முடியவில்லை.

எஸ்ஏ20 லீக் தொடரில் ஜேஎஸ்கே அணிக்காக விளையாடிய போதும், பதிரானாவால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. இதனால் சில போட்டிகளில் பதிரானா பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். இந்த நிலையில் சிஎஸ்கே அணி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் மீண்டும் பழைய ஆக்ஷனில் பதிரானா பவுலிங் செய்து வருகிறார்.

இதேபோன்று அவர் பவுலிங் செய்யும் பட்சத்தில் மற்ற லீக் தொடர்களில் புகார் அளிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அவரின் பவுலிங் ஆக்ஷன் மூலமாக பந்தை எறியும் குற்றச்சாட்டை எளிதாக அளிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டை விடவும் பதிரானாவின் ரிலீஸ் பாயிண்ட் இன்னும் கீழே இறங்கியுள்ளது.
இதே பிரச்சனை காரணமாகவே சுனில் நரைன் பவுலிங் செய்ய தடை விதிக்கப்பட்டு, அவர் புதிய பவுலிங் ஆக்ஷனை முயற்சித்தார். இதனால் பதிரானாவுக்கும் இந்த பிரச்சனை வரலாம் என்று பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரை விடுத்து வேறு எந்த லீக் அல்லது சர்வதேச போட்டிகளிலும் பதிரானாவின் ரிலீஸ் பாயிண்ட் இவ்வளவு கீழே இருந்தால், நிச்சயம் சிக்கல் வரும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications