"நான் ரவி இந்திரன்- நீங்கள் ரவி சந்திரன்" ரஜினியின் தில்லுமுல்லு ஸ்டைலில் அஸ்வினிடம் ஜடேஜா காமெடி
சென்னை: நான் ரவி இந்திரன், நீங்கள் ரவி சந்திரன் என தில்லுமுல்லி ரஜினி போல் அஸ்வினை ரவீந்திர ஜடேஜா பாராட்டினார். சென்னையில் நேற்று அஸ்வினுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஜடேஜா இதை தெரிவித்தார்.
100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினுக்கு தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அப்போது காணொலியில் வந்து வாழ்த்திய ஜடேஜா காமெடியாக பேசினார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக முடிந்த 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. தர்மசாலாவில் நடந்த கடைசி போட்டியில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14ஆவது வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார்.
அந்த டெஸ்ட் போட்டியில் 128 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு அஸ்வின் முக்கிய பங்காற்றினார். இதன் மூலம் உலகிலேயே தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் சிறந்த பவுலராக தன்னை பதிவு செய்த இலங்கை பவுலர் முத்தையா முரளிதரனின் சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார்.
இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தமிழக வீரராக சாதனை படைத்த அஸ்வினுக்கு நேற்று தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில் 500 சாதனை விக்கெட்டுகளை பிரதிபலிக்கும் வகையில் 500 தங்க நாணயங்கள் கொண்ட சிறப்பு பரிசு, செங்கோல் மற்றும் 1 கோடி ரூபாய் காசோலை ஆகியவை அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.
மேலும் அந்த நிகழ்ச்சியில் அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், கவாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அஸ்வினின் பவுலிங் பார்ட்னரான ரவீந்திர ஜடேஜா காணொலியில், அஸ்வினை வாழ்த்தி பேசினார். அவர் பேசுகையில், ஹாஸ் அஷ் அண்ணா, 100 போட்டிகளில் விளையாடி 500 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த உங்களுக்கு வாழ்த்துகள்.
நீங்கள் தொடர்ந்து நிறைய விக்கெட்டுகளை எடுத்து உங்களுடைய மாஸ்டர் மூளையை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நானும் சில விக்கெட்டுகளை எடுத்து உங்களைப் போல் ஜாம்பவானாக வர முடியும் . நாங்கள் இருவரும் ஒரு பெயரை எங்களுக்கு நாங்களே வைத்துக் கொண்டு கொண்டுள்ளோம். அதாவது நான் ரவி இந்திரன், நீங்கள் ரவி சந்திரன், மீசை வைத்தவன் இந்திரன், மீசை வைக்காதவன் சந்திரன் என ஜடேஜா நகைச்சுவையாக பேசினார்.
தில்லுமுல்லு படம் பார்த்திருப்பீர்கள், அதில் தேங்காய் சீனிவாசனிம் தனது அம்மாவுக்கு உடம்புக்கு முடியவில்லை என கூறும் ரஜினி, லீவு போட்டுவிட்டு புட்பால் போட்டிக்கு செல்வார். அங்கு ரஜினி, குண்டு கல்யாணம் உள்ளிட்ட கேங்குகளுடன் செம ஆட்டம் போடுவார். அப்போது தேங்காய் சீனிவாசனும் அங்கு வருவார். ரஜினியை பார்த்து ஷாக் ஆகிவிடுவார். காரணம் பைஜாமா, ஜோல்னா பையுடன் ஆபிஸுக்கு வரும் ரஜினி இப்படி ஸ்டைலாக இருக்கிறாரே, அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை என சொல்லிவிட்டு லீவு போட்டுட்டாரே என அதிர்வார்.
மறுநாள் ஆபிஸுக்கு பழைய பஞ்சாங்கமாக வரும் ரஜினியிடம் கேட்கும் போது அது என் தம்பி சார், இரட்டை பிறப்பு என கூறி சமாளித்ததுடன் மீசை வைத்த நான் இந்திரன், மீசை வைக்காத கேரக்டரில் வருவது இந்திரன் என கூறி சமாளிப்பார். அதே போல் ஜடேஜா, மீசை வைக்காத அஸ்வினை இந்திரனாகவும் மீசை வைத்த தன்னை சந்திரனாகவும் குறிப்பிட்டிருந்தார் (இருவரது பெயரில் ரவீந்திர, ரவிச்சந்திரன் என வருவதால் இந்த காமெடி). அதிலும் ஜடேஜா தமிழில் பேசி அஸ்வினை வாழ்த்தியது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications