அந்த விவகாரம்.. யாஷ் தயாளை பிளாக் லிஸ்ட் செய்த ஆர்சிபி அணி.. பேருந்திலும் கூட இடம் இல்லையே!
மும்பை: ஆர்சிபி அணியின் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாள் அந்த அணியின் பயிற்சி முகாமில் ஈடுபடாதது பேசுபொருளாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி அணியின் பஸ்ஸிலும் யாஷ் தயாளின் புகைப்படம் இடம்பெறவில்லை. இதனால் யாஷ் தயாள் ஓரம்கட்டப்பட்டிருப்பதாக விவாதங்கள் எழுந்துள்ளன.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதிலும் டிஃபெண்டிங் சாம்பியன் ஆர்சிபி அணி மார்ச் 1ஆம் தேதியே பயிற்சியை தொடங்கிவிட்டது. கடந்த வாரம் விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும், வெளிநாட்டு வீரர்களும் வரத் தொடங்கினர்.

இதையடுத்து ஆர்சிபி அணி மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த பயிற்சி முகாமில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாள் மட்டும் மிஸ்ஸாகி இருக்கிறார். ஆர்சிபி அணியின் பயிற்சி முகாமிலும் யாஷ் தயாளை பார்க்க முடியவில்லை. அதேபோல் ஆர்சிபி அணியின் பேருந்திலும் யாஷ் தயாளின் புகைப்படம் இடம்பெறவில்லை.
இதனால் ஆர்சிபி அணியில் இருந்து யாஷ் தயாள் ஓரங்கட்டப்பட்டுவிட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த ஓராண்டாகவே யாஷ் தயாள் பாலியல் ரீதியிலான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் திருமணம் செய்வதாக கூறி பாலியல் ரீதியாக உறவு வைத்திருந்திருக்கிறார்.
அதேபோல் ராஜஸ்தானைச் சேர்ந்த சிறுமியிடம் விளையாட்டில் முன்னேற உதவி செய்கிறேன் என்று கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக யாஷ் தயாள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் யாஷ் தயாளின் புகைப்படங்கள் மற்றும் ஸ்க்ரீன்ஷாட்களும் வெளியாகின. இருப்பினும் அலகாபாத் நீதிமன்றம் யாஷ் தயாளுக்கு முன் ஜாமீன் வழங்கியது.
இதனால் யாஷ் தயாள் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்திருக்கிறார். இதனிடையே பிப்ரவரி மாதம் யாஷ் தயாள் மற்றும் இன்ஸ்டாகிராம் மாடலான ஸ்வேதா புந்திர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாகவே யாஷ் தயாள் யாருடனும் தொடர்பில் இல்லை. கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச ரஞ்சி அணிக்காகவும் யாஷ் தயாள் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications