மழையில் வைப் செய்த டிம் டேவிட்.. நாளை ஆர்சிபி - கேகேஆர் போட்டி பாதிக்கப்படுமா? வானிலை நிலவரம் என்ன?
பெங்களூர்: ஐபிஎல் தொடரின் கடைசி கட்ட போட்டிகள் நாளை மீண்டும் தொடங்க உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பதிலடி கொடுத்தது. இதன்பின் இந்தியா - பாகிஸ்தான் இடையில் மோதல் வெடித்தது. டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை, இந்தியா முறியடித்தது. இதன்பின் இரு நாடுகளும் அமைதியாக இருக்க ஒப்புதல் தெரிவித்தனர்.
இதன்பின் அடுத்த சில நாட்களிலேயே எல்லையோர மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பின. இதன்பின் உடனடியாக ஐபிஎல் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி, புதிய அட்டவணையை அறிவித்தனர். அதன்படி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை முதல் ஜூன் 3ஆம் தேதி வரை நடக்க உள்ளது. நாளைய ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்த்து கேகேஆர் அணி களமிறங்க உள்ளது.

இந்த சீசனில் ஆர்சிபி அணியை பொறுத்தவரை 11 போட்டிகளில் 8 வெற்றிகள், 3 தோல்விகள் உட்பட 16 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேபோல் கேகேஆர் அணியை பொறுத்தவரை 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்வி உட்பட 11 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
இதில் ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியான நிலையில், கேகேஆர் அணி ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும், பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிடும். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பின், விராட் கோலி விளையாடும் முதல் போட்டி இதுதான். இதனால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெங்களூரில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று ஆர்சிபி அணியின் பயிற்சியின் போது திடீரென மழை பெய்த நிலையில், வீரர்கள் அனைவரும் ஓய்வறைக்கு திரும்பினர். ஒரு கட்டத்தில் மைதானத்தை ஊழியர்கள் அனைவரும் தார்பாய் மூலம் மூடிய போது, ஆர்சிபி அணியின் டிம் டேவிட் மழையில் ஓடி விளையாடி நனைந்து உற்சாகம் அடைந்தார்.
அவருடன் மேலும் சில வீரர்கள் இணைந்து கொள்ள ஆர்சிபி அணி எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று கொண்டாடாத குறையாக வைப் செய்தனர். தற்போது பெங்களூரில் நாளைய ஐபிஎல் போட்டியின் போது 65 சதவிகிதம் வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பின் தொடங்கும் ஐபிஎல் போட்டி மழையால் பாதிக்கப்படுமா என்ற ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் கேகேஆர் அணிக்கு இந்த போட்டி முக்கியமானதாகும். இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், இரு அணிகளும் தலா ஒரு புள்ளி அளிக்கப்படும். இதனால் கேகேஆர் அணியால் 15 புள்ளிகளை கூட எட்ட முடியாத நிலை உருவாகும்.












Click it and Unblock the Notifications