கோலி, ரோகித்துடன் பேச மாட்டேன்.. பிடிவாதமாக இருக்கும் கம்பீர்.. இந்திய அணியில் உச்சக்கட்ட மோதல்!
வதோதரா: இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருடன் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசாமல் பிடிவாதம் பிடித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முதலே இவர்களுக்கு இடையில் எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை வதோதராவில் தொடங்க உள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்த அணியில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரு வீரர்களும் உச்சக்கட்ட ஃபார்மில் ரன்களை குவித்தனர்.

அதேபோல் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இருவரும் முதல் 2 இடங்களில் இருக்கின்றனர். இதனால் அவர்களின் சிறந்த ஃபார்ம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வதோதராவில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அதேபோல் வதோதரா பிட்சையும் சுப்மன் கில் மற்றும் கவுதம் கம்பீர் கூட்டணி பார்வையிட்டது.
இதன்பின் நேற்றிரவு நடந்த பயிற்சியின் போது கவுதம் கம்பீர் கேப்டன் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ், கேஎல் ராகுல் மற்றும் இன்னும் சில வீரர்களுடன் பேசி உற்சாகமாக இருந்திருக்கிறார். ஆனால் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பயிற்சியின் போது கம்பீர் அந்த இடத்திலேயே இல்லை என்று சொல்லப்படுகிறது.
அதேபோல் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும் கூட விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் கம்பீர் ஆகியோர் ஒன்றாக இருக்கவில்லை. இதன் மூலமாக கடந்த சில மாதங்களாகவே கம்பீர் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருடன் பேசுவதில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் இந்திய அணியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
இந்திய ஒருநாள் அணியை மொத்தமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தடையாக இருப்பதால், அவர்களை ஓய்வை அறிவிக்க தேர்வுக் குழு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இவர்கள் இருவருமே 2027 உலகக்கோப்பை வரை விளையாடுவோம் என்று தீவிரம் காட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications