சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன்.. அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடந்ததா? ராஜஸ்தான் நிர்வாகி சொன்ன உண்மை
மும்பை: ராஜஸ்தான் அணியில் இருந்து நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் விலகுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தகவல் கிடைத்துள்ளது. அடுத்த சீசனில் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு மாற உள்ளதாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது சஞ்சு சாம்சனை டிரேட் செய்யும் முடிவில் இருந்து ராஜஸ்தான் அணி பின் வாங்கிவிட்டதாகத் தெரிய வந்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் நிறைவு செய்தது. சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி ஆடிய போதும், அந்த அணியால் போட்டிகளை வெல்ல முடியவில்லை. அதேபோல் ராஜஸ்தான் அணியிலும் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகியதால், அவரால் முழுமையாக விளையாட முடியவில்லை.

இதனிடையே ரியான் பராக் - சாம்சன் இடையில் கேப்டன்சி மோதல் எழுந்ததாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ரியான் பராக்கின் உறவினரும் ஒருவர். இதனால் ராஜஸ்தான் அணி நிர்வாக ஆதரவு ரியான் பராக்கிற்கு இருப்பதால், சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகின.
அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியில் இருந்தும் சஞ்சு சாம்சனுக்கு மிகப்பெரிய ஆதரவு இருந்தது. தோனியின் இடத்தை எளிதாக சஞ்சு சாம்சனால் நிரப்ப முடியும். கேரளா மக்களின் ஆதரவும் சஞ்சு சாம்சனுக்கு இருப்பதால், அதனை சிஎஸ்கே பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக இருந்தது. இந்த சூழலில் அமெரிக்காவில் நடந்த மேஜர் லீக் தொடரில் டிஎஸ்கே அணி ஆடிய போட்டிகளின் போது மைதானத்தில் சஞ்சு சாம்சன் காணப்பட்டார்.
அப்போது டிஎஸ்கே அணியின் நிர்வாகிகள் சஞ்சு சாம்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன் புகைப்படங்கள் வெளியாகி புயலைக் கிளப்பின. சிஎஸ்கே அணியில் இருந்து சிவம் துபே மற்றும் அஸ்வின் ஆகியோரை கொடுத்துவிட்டு சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் குஷியாகினர்.
இந்த நிலையில் ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை விடுவிக்க வாய்ப்பே இல்லை என்று தகவல் கிடைத்துள்ளது. ராஜஸ்தான் அணியின் நெருக்கமான வட்டத்தில் இருக்கும் நபர் பேசுகையில், சஞ்சு சாம்சன் மட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணியின் எந்த வீரரையும் டிரேட் செய்யும் முடிவில் அதன் நிர்வாகிகள் இல்லை. சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியின் அடையாளமாக இருக்கிறார்.
இதனால் சஞ்சு சாம்சன் விருப்பப்படும் வரை ராஜஸ்தான் அணியின் கேப்டனாக கேப்டனாக அவரே தொடர்வார் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். இன்னும் 3 மாதங்களில் நடக்க உள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் இன்னும் சில நல்ல வீரர்களை வாங்க வேண்டும் என்று புலம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications