ராஜஸ்தான் அணியில் எனக்கான நேரம் வந்துவிட்டது.. களத்தில் எந்த பாவமும் பார்க்க மாட்டேன்! சஞ்சு சாம்சன்
மும்பை: ராஜஸ்தான் அணியில் எனக்கான நேரம் முடிவுக்கு வந்துவிட்டதால், அந்த அணியில் இருந்து வெளியேற முடிவு செய்ததாக நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட இதுவரை ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஆடியதில்லை என்று கூறிய சஞ்சு சாம்சன், அதற்காக களத்தில் எந்த எமோஷனையும் வெளிப்படுத்த போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. அந்த வகையில் மார்ச் 30ஆம் தேதி சிஎஸ்கே அணி தங்களின் முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த சீசனில் சஞ்சு சாம்சன் முதல்முறையாக சிஎஸ்கே அணிக்காக விளையாட இருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக ராஜஸ்தான் அணிக்காக ஆடியவர், இம்முறை அந்த அணியை எதிர்த்து விளையாட உள்ளார்.

2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ராஜஸ்தான் அணிக்கு தடை விதிக்கப்பட்ட போது மட்டும் சஞ்சு சாம்சன் டெல்லி அணிக்காக ஆடி இருந்தார். அதன்பின் மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு திரும்பிய சஞ்சு சாம்சன், ஒரு கட்டத்தில் கேப்டனாக உயர்ந்து அந்த அணியை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து வந்தார். ஆனால் ராஜஸ்தான் நிர்வாகிகளின் அரசியல் வேறு மாதிரி அமைந்தது.
ரியான் பராக்கை முன்னிறுத்தும் பணியில் ராஜஸ்தான் அணி நிர்வாகம் தயாராகியதை உணர்ந்த சஞ்சு சாம்சன், அந்த அணியில் இருந்து வெளியேறும் முடிவை கடந்த சீசனின் பாதியிலேயே எடுத்துவிட்டார். இதன்பின் டி20 உலகக்கோப்பை தொடரில் உச்சக்கட்ட ஃபார்மில் ஆடி தொடர் நாயகன் விருதை சஞ்சு சாம்சன் கைப்பற்றினார். இதனால் சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் வருவது ரசிகர்களிடையே உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில் முதல் போட்டியிலேயே ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவது தொடர்பாக சஞ்சு சாம்சன் பேசுகையில், ஐபிஎல் தொடரில் இதுவரை ராஜஸ்தான் அணிக்கு எதிரான விளையாடும் சூழல் அமைந்ததே கிடையாது. முதல்முறையாக ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறேன். மைதானத்தில் இறங்கிய பின் எமோஷனலாக இருப்பேன் என்று நினைக்கவில்லை.
நிச்சயமாக அன்றைய ஆட்டம் தான் யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்க போகிறது. ஆனால் இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவும், முடிவடைந்த பின்னரும் நான் அந்த அணிக்காக விளையாடிய போது இருந்த வீரர்களுடனும், நிர்வாகிகளுடனும் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும். என்னுடன் ஆடிய பல இளம் வீரர்கள் அந்த அணியில் உள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருவர் மீதும் மரியாதையும், அன்பும் இருக்கிறது.
ஆனால் ராஜஸ்தான் அணியில் எனக்கான நேரம் முடிவுக்கு வந்துவிட்டது.. ஒவ்வொரு நபருக்கும் ஒரு அணியில் குறிப்பிட்ட நேரம் அமையும்.. எனக்கான நேரம் வந்துவிட்டதால், சிஎஸ்கே அணி நோக்கி வந்துவிட்டேன்.. சிஎஸ்கே அணியுடன் ஒரு புதிய பயணம் தொடங்க போகிறேன்.. ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடினாலும், மகிழ்ச்சியாகவே விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications