சிஎஸ்கே அணிக்காக முதல் சம்பவம்.. 52 பந்துகளில் சதம் அடித்த சஞ்சு சாம்சன்.. இனிதான் ஆட்டமே இருக்கு
சென்னை: சிஎஸ்கே அணிக்காக நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் முதல் அரைசதத்தை விளாசி இருக்கிறார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் சதத்தை எட்டினார். கடந்த 3 போட்டிகளாக சொதப்பிய சஞ்சு சாம்சன், இந்த போட்டியில் ஃபார்முக்கு வந்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் சிஎஸ்கே அணிக்காக சஞ்சு சாம்சன் - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாட, சஞ்சு சாம்சன் முதல் ஓவரிலேயே பவுண்டரிகளை விளாசினார்.

ஒவ்வொரு ஓவருக்கும் குறைந்தது ஒரு பவுண்டரியை சஞ்சு சாம்சன் விளாச தொடங்கினார். அதிலும் அக்சர் படேல் மற்றும் இங்கிடி ஆகியோரின் பவுலிங்கில் 2 பவுண்டரிகளை விளாசினார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 61 ரன்களாக உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
இதையடுத்து அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் சிக்சர்களையும் விளாச தொடங்கினார். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்ஸ் என்று பறக்கவிட, சிஎஸ்கே அணியின் ஸ்கோரும் எகிறியது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் 3 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட சதத்தை எட்டினார். ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் அடிக்கும் 4வது சதம் இதுவாகும்.
கடந்த 3 போட்டிகளாக சஞ்சு சாம்சன் இரட்டை இலக்க ஸ்கோரையே எட்டவில்லை. இதனால் கடந்தப் போட்டிக்கு பின் சஞ்சு சாம்சன் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து சஞ்சு சாம்சன் வாக்கு செலுத்துவதற்காக சொந்த ஊர்க்கு சென்றுவிட்டு வந்தார்.
அதேபோல் சிஎஸ்கே வீரர்களுக்கு நல்ல ஓய்வும் கிடைத்தது. சுமார் ஒரு வாரத்திற்கு பின் கம்பேக் கொடுத்த சஞ்சு சாம்சன், தற்போது சதம் விளாசி அசத்தியுள்ளார். அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் காட்டிய நிதானத்தை இன்றைய ஆட்டத்தில் பார்க்க முடிந்தது. இதனால் சஞ்சு சாம்சன் ஃபார்முக்கு திரும்பிவிட்டதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications