ராசியில்லாத அகமதாபாத் மைதானம்.. திடீரென ஹோட்டலை மாற்றிய இந்திய அணி.. தோல்வியை தவிர்க்க மூடநம்பிக்கை?
அகமதாபாத்: டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனல் நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் தான் வழக்கமாக இந்திய அணி தங்கும் ஹோட்டலை மாற்றி உள்ளது. கடந்த 2023ல் அகமதாபாத்தில் நடந்த 50 ஓவர் உலககோப்பை போட்டி பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற நிலையில் மூடநம்பிக்கையால் தற்போது இந்தியா ஹோட்டலை மாற்றி உள்ளதாக பலரும் கூறி வருவது கவனம் பெற்றுள்ளது.
2026ம் ஆண்டுக்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நாளை பைனல் போட்டி நடக்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் பைனலில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

இந்த போட்டி நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. டி20 சாம்பியன் பட்டத்தை வெல்ல நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே கடும் போட்டி இருக்கும். இதனால் நாளை நடக்கும் இறுதி போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே தான் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்திய கிரிக்கெட் அணி அகமதாபாத்தில் வழக்கமாக தங்கும் ஹோட்டலை மாற்றி உள்ளதாம். பொதுவாக இந்திய அணி அகமதாபாத்தில் விளையாடும்போது அங்குள்ள ஐடிசி நர்மதா ஹோட்டலில் தங்குவது வழக்கம்.
கடந்த 2023ம் ஆண்டில் 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணி அந்த ஹோட்டலில் தான் தங்கியது. ஆனால் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் போனது. அதேபோல் சூப்பர் 8 சுற்றிலும் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதின. இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இதனால் ரசிகர்கள் மத்தியில் அகமதாபாத் மைதானம் முக்கிய போட்டிகளின்போது இந்திய அணிக்கு கைக்கொடுப்பது இல்லை என்று நினைக்கின்றனர். இந்நிலையில் தான் தற்போது இந்திய அணி தாங்கள் தங்கும் ஹோட்டலை மாற்றி உள்ளது. அதன்படி வழக்கமாக தங்கும் ஐடிசி நர்மதா ஹோட்டலுக்கு பதில் தாஜ் ஸ்கைலைன் ஹோட்டலில் இந்திய அணி வீரர்கள் தங்கி உள்னர்.
இந்த ஹோட்டல் மாற்றம் தற்போது கவனம் பெற்றுள்ளது. முக்கிய போட்டிகளின்போது ஐடிசி நர்மதா ஹோட்டல் இந்திய அணிக்கு ராசியில்லை. இதனால் தான் தற்போது ஹோட்டல் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணி இந்த முறை எப்படியாவது டி20 உலககோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் பிசிசிஐ ஆர்வமாக உள்ளது.
அதன்படி அணியில் உள்ள சப்போர்ட்டிங் ஸ்டாப் ஒருவர் எங்கெங்கு இந்திய அணி செல்கிறதோ அங்குள்ள கோவில்களில் பிரார்த்தனை செய்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அதேபோல் அரையிறுதி போட்டிக்கு முன்பாக சந்திர கிரகணத்தின்போது இந்திய வீரர்கள் 45 நிமிடங்கள் பயிற்சியை தவிர்த்தனர்.
சந்திர கிரகணம் சமயத்தில் பயிற்சி செய்வது நல்லதை வழங்காது என்பதால் இந்திய வீரர்கள் அந்த சமயத்தில் ஓய்வெடுத்ததாக கூறப்பட்டது. இந்த தகவலை தொடர்ந்து தற்போது ஹோட்டல் மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி மூடநம்பிக்கை கொண்டுள்ளதா? என்ற கேள்வியை பலரும் எழுப்பி உள்ளனர்.












Click it and Unblock the Notifications