வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ
சென்னை: 15 வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு, பிசிசிஐ மேலும் ஒரு சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது அவர் புதிய சூழலுக்கு எளிதில் பழகுவதற்காக, அவரது பெற்றோரும் உடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அதற்கான அனைத்து செலவுகளையும் பிசிசிஐயே ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி நடப்பு மாத இறுதியில் அயர்லாந்து சுற்றுப்பயணம் செய்கிறது. அந்த நாட்டுக்கு எதிராக இரண்டு டி20 போட்டியில் விளையாடுகிறது. பின்னர் அயர்லாந்தில் இருந்து இங்கிலாந்து செல்லும் இந்திய அணி 5 டி20 போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் உடன் செல்லலாம்
இந்த அணியில் ஐபிஎல் தொடரில் கலக்கிய 15 வயதே ஆன சூர்யவன்ஷிக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்துள்ளது. 16 வயதில் இந்திய அணிக்கு அறிமுகம் ஆன சச்சின் டெண்டுல்கரின் 33 ஆண்டு கால சாதனையை சூர்யவன்ஷி முறியடிக்க உள்ளார். ஐபிஎல் போட்டிகளில் பட்டாசாக வெடித்த சூர்யவன்சி சர்வதேச போட்டிகளில் எப்படி விளையாட போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.
15 வயது மட்டுமே என்பதால் சூர்யவன்ஷிக்கு சிறப்பு சலுகை ஒன்றையும் பிசிசிஐ அளிக்க முன்வந்துள்ளது. அதாவது, சூர்யவன்ஷியுடன் அவரது பெற்றோர்கள் உடன் செல்லலாம் என்றும் இதற்கான முழு செலவையும் பிசிசிஐயே ஏற்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளர் தேவஜித் சைகியா கூறியதாவது:-
சூர்யவன்ஷி சிறுவன் என்பதால்..
பொதுவாக வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின்போது வீரர்களுடன் அவர்களின் பெற்றோர்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றாலும், வைபவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சூர்யவன்ஷி இன்னும் சிறுவன்; சட்டப்படி மைனர். இந்திய அணியில் தற்போது இருப்பவர்கள் அனைவரும் பெரியவர்கள் என்பதால், அவரது பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் அவருடன் இலங்கை செல்லுவது சரியானது என்று நாங்கள் கருதுகிறோம்.
அவரது பெற்றோரிடம் நாங்கள் கோரிக்கை வைப்போம். அவர்கள் விரும்பினால் அவருடன் செல்லலாம். உண்மையில், அவரது தந்தை நாளை இலங்கைக்கு பயணிக்கிறார். இதுதான் எங்களின் எண்ணம். பின்னர், அவரது பெற்றோர் இங்கிலாந்துக்கும் செல்ல விரும்பினால், பிசிசிஐ அதற்கும் ஆதரவு வழங்கும். மூத்த வீரர்களுடன் பழகி, அந்த சூழலுக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள அவருக்கு சிறிது காலம் தேவைப்படும். அந்தக் கண்ணோட்டத்தில்தான் நாங்கள் உதவி செய்கிறோம்.
இது அனைத்து வீரர்களின் பெற்றோருக்கும் வழங்கப்படும் சலுகை அல்ல. சூர்வயன்ஷி 15 வயதான சிறுவன் என்பதால், அவர் சௌகரியமாக உணரவும், சீனியர்கள் டீமிற்குள் மெதுவாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவும் உதவும்" என்றார். தற்போது வைபவ் சூர்யவன்ஷி, இந்தியா ஏ அணியுடன் இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சூர்யவன்ஷி தேர்வு பற்றி இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாவது:-
"வைபவ் தனது அதிரடி ஆட்டத்தால் இயற்கையாகவே இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல் போன்ற கடுமையான போட்டித் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடியிருப்பது அவரது திறமையை காட்டுகிறது. எதிர்காலத்தில் அவர் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆட்டக்காரராக உருவெடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications