தோனி ஃபிட் தான்.. ஆனாலும் விளையாட வரல.. சிஎஸ்கே டீமிற்கு 'தல' வராதது ஏன்? வெளியான முக்கிய தகவல்
சென்னை: தல தோனி காயம் காரணமாகப் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். இதற்கிடையே தோனி ஏற்கவே பிட் ஆகிவிட்டதாகவும் இருப்பினும் அவர் தான் அணியில் இணையவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பிட் ஆன பிறகும் தோனி விளையாடாமல் இருப்பது ஏன்.. தல தோனியின் இந்த வினோத முடிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஐபிஎல் தொடர் இப்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே அணி தொடக்கத்தில் திணறி வந்த நிலையில், இப்போது தான் ஓரளவுக்கு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அடுத்து வரும் போட்டிகளில் சிஎஸ்கே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே அடுத்த சுற்றுக்குச் செல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது. இந்தச் சூழலில் இன்றைய தினம் குஜராத் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே எதிர்கொள்கிறது.

தல தோனி மிஸ்ஸிங்
இன்றைய தினம் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக்கம் மைதானமே மஞ்சள் கடலாகக் காட்சியளிக்கிறது. ஆனால், அந்த மைதானத்தின் இதயத் துடிப்பாக விளங்கும் 'தல' தோனி, இன்றும் ஆடும் லெவனில் இல்லை. அவ்வளவு ஏன் தோனி டீம் உடன் கூட பயணிப்பதில்லை. மைதானத்திலும் அவரை பார்க்க முடிவதில்லை. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
இதற்கிடையே தோனி காயத்திலிருந்து மீண்டு, உடற்தகுதித் தேர்விலும் பாஸ் செய்துவிட்டதாகவும்.. ஆனாலும், தோனி சிஎஸ்கே அணியுடன் இணையவில்லை என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பான தகவல் சிஎஸ்கே ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி கொடுப்பதாக இருக்கிறது.
என்ன காரணம்
அதாவது பயிற்சியின் போது தசைநார் (Calf Strain) காயத்தால் அவதிப்பட்டு வந்த தோனி, கடந்த சில நாட்களாக நெட்ஸில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் 100% ஃபிட் ஆகிவிட்டதாகத் தகவல்கள் வெளியானாலும், இன்றைய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை. இதற்குப் பின்னணியில் இருக்கும் மிக முக்கியமான காரணம், தோனியின் 'டீம் ஃபர்ஸ்ட்' பாலிசிதான் என்கிறார்கள்.
வாய்ப்பு பறிபோகக்கூடாது
ஆங்கில நாளேடான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இது தொடர்பாக சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது தான் டீமுக்கு உள்ளே வருவதால், தற்போது நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு இளம் வீரரின் வாய்ப்பு பறிபோகக் கூடாது என்று தோனி நினைக்கிறாராம். மேலும், தொடரின் முக்கியமான கட்டத்தில் அணியின் காம்பினேஷன் இப்போது தான் ஓரளவுக்கு செட் ஆகி இருக்கிறது. இந்த நேரத்தில் அதைக் குலைக்க அவர் விரும்பவில்லை. தோனி எப்போது வேண்டுமானாலும் களமிறங்கலாம் என அணி நிர்வாகம் பிளாங்க் செக் கொடுத்திருந்தாலும், தோனி இன்னும் சில போட்டிகள் பொறுத்திருக்க முடிவெடுத்துள்ளார்.
பயிற்சியாளர் சொல்வது என்ன?
தோனி பேட்டிங்கில் மட்டும் கலக்க 'இம்பாக்ட் பிளேயராக' வருவார் எனப் பேசப்பட்டது. ஆனால், சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, அதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். "தோனி வந்தால் விக்கெட் கீப்பராகவும், பேட்டராகவும்தான் வருவார். அவர் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடும் வேகத்தை உறுதி செய்ய வேண்டியிருக்கிறது" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெல்வது சிஎஸ்கே அணியின் அடுத்த சுற்று வாய்ப்பை மேலும் உறுதி செய்யும். இருப்பினும், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சுமாரான ஆட்டத்தையே சிஎஸ்கே வெளிப்படுத்தும் நிலையில், ஒவ்வொரு போட்டியும் ரொம்பவே முக்கியமானதாக மாறியிருக்கிறது.














Click it and Unblock the Notifications