முதல் கருப்பின கேப்டன்.. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டில் பின்பற்றும் இடஒதுக்கீடு.. பவுமாவின் சம்பவம்
சென்னை: ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. 27 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் ஐசிசி கோப்பையை வென்றுள்ளது. அதிலும் கறுப்பினத்தைச் சேர்ந்த டெம்பா பவுமாவின் தலைமையின் கீழ் தென்னாப்பிரிக்கா அணி வென்றிருப்பது அந்நாட்டு மக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த சூழலில் தென்னாப்பிரிக்கா அணியின் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறையை பற்றி பார்க்கலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக சோக்கர் என்ற அடையாளத்தை தென்னாப்பிரிக்கா அணி தூக்கி எறிந்திருக்கிறது. கிரேம் ஸ்மித், பொல்லாக், டி வில்லியர்ஸ், ஆம்லா, டூ பிளசிஸ் என்று எத்தனையோ கேப்டன்களால் முடியாததை டெம்பா பவுமா சாதித்து காட்டியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் பாகுபாடு
தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றி என்பதை விடவும், தமிழ்நாட்டில் டெம்பா பவுமாவின் வெற்றியாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால் கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு வீரர் தென்னாப்பிரிக்கா அணிக்கு முதல்முறையாக முழு நேர கேப்டனாக செயல்படுவது இதுவே முதல்முறையாகும். தென்னாப்பிரிக்காவில் கருப்பின மற்றும் வெள்ளையின மக்களுக்கு இடையிலான பாகுபாடுகள் இப்போதும் இருந்து வருகிறது.
இடஒதுக்கீடு முறை
வெள்ளையின மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் கருப்பின மக்களுக்கு பாதியளவு கூட கிடைப்பதில்லை. இதற்காகவே தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் கொண்டு வரப்பட்டதுதான் இடஒதுக்கீடு முறையாகும். அதாவது தென்னாப்பிரிக்கா பிளேயிங் லெவனில் குறைந்தபட்சம் 2 கருப்பின வீரர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதே விதியாகும்.
கருப்பின பேட்ஸ்மேன்கள்
இப்படிதான் நிடினி, பிலாண்டர், ரபாடா உள்ளிட்டோர் தென்னாப்பிரிக்கா அணிக்குள் கொண்டு வரப்பட்டனர். ஆனால் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தோன்றிய காலத்தில் இருந்தே கருப்பின வீரர்களாக பவுலர்கள் மட்டுமே வந்துகொண்டே இருந்தனர். ஆனால் பேட்ஸ்மேன்களின் பிரதிநிதிகள் என்று யாருமே கிடையாது என்று சொல்லலாம்.
கருப்பின வீரரின் முதல் சதம்
அந்த வகையில் தென்னாப்பிரிக்கா அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த முதல் கருப்பின பேட்ஸ்மேன் டெம்பா பவுமா தான். அவருக்கு அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. யாராவது காயம் அடைந்தால் மட்டுமே பவுமாவுக்கு இடம் கிடைக்கும். அப்படியான நேரத்தில் 2021ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக நியமிக்கப்படுகிறார் டெம்பா பவுமா.
முதல் கருப்பின கேப்டன்
தென்னாப்பிரிக்கா அணியின் முதல் முழு நேர கருப்பின கேப்டன். அடுத்த 4 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டில் எந்த ஜாம்பவான் கேப்டனாலும் சாதிக்க முடியாத வெற்றியை டெம்பா பவுமா பெற்று அந்நாட்டு மக்களுக்கு மறக்க முடியாத சந்தோஷத்தை கொடுத்துள்ளார். இதன் காரணமாகவே தென்னாப்பிரிக்காவின் வெற்றியில் இடஒதுக்கீடு முறைக்கு பங்கு இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.
ட்ரோல்களுக்கு பதிலடி
டெம்பா பவுமா கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட போதும் கூட அவரின் பேட்டிங் சராசரி, அவரின் உயரம், நிறம் உள்ளிட்டவை குறித்து கேலிகளும், கிண்டல்களும் எழுந்தன. இந்தியாவில் உலகக்கோப்பை விளையாட வந்த போது பவுமா அளவிற்கு கிண்டல் செய்யப்பட்ட வீரர் யாருமில்லை. அத்தனை ட்ரோல்களுக்கு ஒரேயொரு வெற்றியின் மூலமாக பவுமா பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications