கடைசி மேட்ச்ல சதமடித்தும் டீமில் இடமில்லை.. ஜெய்ஸ்வாலுக்கு நடந்த துரோகம்.. பின்னணியில் சுப்மன் கில்!
மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஜூன் மாதம் தொடங்கவுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில், டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள இளம் அதிரடி தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ஸ்வால் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டியில் மேட்ச்-வின்னிங் சதம் அடித்திருந்தார். அடுத்த தொடரிலேயே அணியில் இருந்து நீக்கியது ஏன் என்று அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவை நோக்கி ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது சுப்மன் கில் காயம் அடைந்தார்.

இதனால் மாற்று தொடக்க வீரராக ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொடரின் கடைசி போட்டியில், அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 116* ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமானார். தற்போது ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதன்மைத் தொடக்க வீரர்கள் அணிக்குத் திரும்பியதால், ஜெய்ஸ்வால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங் பேக்-அப் ஆப்ஷன் தேவை என்ற காரணத்தைக் கூறி, ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக இஷான் கிஷன் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் 3-வது ஓப்பனராகப் பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால், தற்போது அணியிலேயே இல்லாதது அவரது ஒயிட் பால் கிரிக்கெட் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.
இதுகுறித்து வெங்கடேஷ் பிரசாத் பேசுகையில், ரோஹித், கில் இருப்பதால் ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், திலக் வர்மா தலைமையில் இலங்கை செல்லவிருக்கும் 'இந்தியா ஏ' அணியிலாவது அவரைச் சேர்த்திருக்க வேண்டும். வீட்டில் சும்மா உட்கார வைப்பதற்குப் பதிலாக, அங்கு விளையாட அனுப்பியிருந்தால் அவர் உற்சாகமாக இருந்திருப்பார்.
அவர் 'இந்தியா ஏ' அணியில் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார். சமீபகாலமாக இந்திய அணி நிர்வாகம் ஒரே ஒரு திறமையை மட்டும் கொண்ட வீரர்களை விட, பேட்டிங் மற்றும் கீப்பிங் அல்லது ஆல்-ரவுண்டர் எனப் பல திறமைகளைக் கொண்ட வீரர்களுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஜெய்ஸ்வால் ஒரு தேர்ந்த பியூர் பேட்ஸ்மேன் என்பதால், இஷான் கிஷனுக்காக அவர் பலியாக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் கௌதம் கம்பீரின் 'கூடுதல் ஸ்பின்னர்' வியூகத்தால் ஜெய்ஸ்வால் கடைசி நேரத்தில் கழற்றிவிடப்பட்டார். இப்போது ஆப்கானிஸ்தான் தொடரிலும் அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications