ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இஷாந்த் சர்மா “அவுட்”- உடல் தகுதி தேர்வில் “பெயில்”
டெல்லி: ஐசிசி உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்கள் நான்கு பேருக்கு இன்று உடல் தகுதி தேர்வு நடைபெற்றதில் காயம் காரணமாக பந்து வீச்சாளார் இஷாந்த் சர்மா தேர்ச்சி பெறவில்லை. அதன்காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து வெளியேறுகின்றார் இஷாந்த் சர்மா.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவதற்காக வீரர்கள் ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா, ரவிந்தர ஜடேஜா மற்றும் புவனேஷ்குமார் ஆகியோருக்கு உடல் தகுதி தேர்வு இன்று நடைபெற்றது..
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில் இந்த நான்கு வீரர்களும் காயமடைந்திருந்தனர். அதன் காரணமாகவே அவர்களுக்கு இந்த உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
அதில் தோல்வியடைந்த இஷாந்த் சர்மா 15 பேர் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இடம் பெறுகின்ற வாய்ப்பினை இழக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது இடத்திற்கு யார் இடம் பெறப்போகின்றார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அவருடைய இடத்திற்கு மோகித் அல்லது தாவல் குல்கர்னி ஆகிய இருவரில் ஒருவர் வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.