இலங்கை சிறையில் இருந்து 44 தமிழக மீனவர்கள் விடுதலை- இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!
மன்னார்: இலங்கை சிறையில் வாடிய 44 தமிழக மீனவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இலங்கை சிறையில் வாடிய இந்த மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். மேலும் மீனவர்களை விடுதலை செய்ய கோரி ராமேஸ்வரம் உள்ளிட்ட சில இடங்களில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே சிறையில் உள்ள 99 மீனவர்களையும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி விடுதலை செய்வதாக இலங்கை அரசு அறிவித்தது. இதனடிப்படையில் முதல் கட்டமாக இன்று 44 மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இன்று தமிழகம் திரும்ப உள்ளனர்.