இலங்கைக் கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்.. ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து 651 விசைப்படகுகளில் 2,700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே நேற்று நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து, 7 மீனவர்களை கைது செய்த இலங்கைக் கடற்படையினர், அவர்கள் சென்ற 2 படகுகளையும் சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்களில் 3 மீனவர்களையும், 1 படகையும் தலைமன்னார் கடற்படை முகாமிலும் மீதமுள்ள 4 மீனவர்களையும், 1 படகையும் மற்றோரு கடற்படை முகாமிலும் தங்கவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இன்று பிற்பகலுக்கு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
ஏற்கனவே இலங்கை சிறையில் 60-க்கும் மேற்பட்ட மீனவர்களும், 60க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இன்று 7 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை பொங்கல் பண்டிகைக்குள் விடுதலை செய்ய வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications