நல்லூர் கந்தசுவாமி கோயில் கொடியேற்றம்.. பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தொடங்கிய மகோற்சவம்!
யாழ்ப்பாணம்: வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வருடாந்திர மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி இருக்கிறது. இந்த கொடியேற்ற நிகழ்வில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் கொடியேற்றம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்கக் கொடியேற்றம் இடம்பெற்றது. பெருமளவிலான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு அங்கப்பிரதட்சணம் உட்பட பல்வேறு நேர்த்திகளில் ஈடுபட்டனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவம் தொடங்கியுள்ளது. இன்று காலை நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியுடன் மகோற்சவ பெருவிழா தொடங்கியது. முன்னதாக நேற்று கொடியேற்றத்திற்கான சம்பிரதாயப் பூர்வ கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்குந்த மரபினரால் வடிவமைக்கப்பட்ட கொடிச்சீலை பாரம்பரிய முறைப்படி நேற்று யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டு, அங்கு விசேஷ பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சிறிய தேரொன்றில் எடுத்து வரப்பட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கையளிக்கப்பட்டது. மேலும் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள மகோற்சவம் வரும் செப்.14ஆம் தேதி வரை நடக்கவுள்ள தீர்த்த திருவிழா வரை 25 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications