சீனாவை தாங்கிப் பிடிக்கும் சிறிசேன அரசு- இந்திய எதிர்ப்பை மீறி துறைமுக நகர் திட்டத்துக்கு அனுமதி!!
கொழும்பு : இலங்கை தலைநகர் கொழும்பு அருகே சீனாவின் துறைமுக நகர் திட்டத்துக்கு சிறிசேன அரசு ஒப்புதல் அளித்திருப்பது இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான துறைமுக நகர் அமைக்க சீனாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இது இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று இலங்கை அரசிடம் அப்போது தெரிவிக்கப்பட்டது.
மேலும் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவும் சீனாவின் இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அதிபர் தேர்தலின் போது பிரசாரம் செய்த சிறிசேனவும் இந்த திட்டத்தை தாம் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வேன் என்று கூறியிருந்தார்.

தற்போது சிறிசேனா அமைச்சரவையோ சீனாவின் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதன் மூலம் 108 ஹெக்டேர் நிலம் சீனா நிறுவனத்துக்கு கொடுக்கப்படும். இதில் 99 ஆண்டுகால குத்தகை பெற்ற 20 ஹெக்டேர் நிலமும் அடங்கும்.
ஏற்கெனவே சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைக்கு வந்ததால் இந்தியா கடும் அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்தி இருந்தது. அதுவும் 20 ஹெக்டேர் நிலத்தை 99 ஆண்டுகாலத்துக்கு சீனாவுக்கு இலங்கை கொடுத்திருப்பது இந்தியாவை கவலை அடையச் செய்துள்ளது.
துறைமுக நகர் கட்டுமானப் பணிகள் என்ற பெயரில் இலங்கைக்கு சீனாவின் சரக்கு கப்பல்கள் வந்து செல்வதும் கொழும்பு துறைமுகத்தில் அவை நிறுத்தி வைக்கப்படுவதும் இந்தியாவின் பாதுகாப்பு க்கு அச்சுறுத்தல் என்று சுட்டிக்காட்டப்பட்ட நிலையிலும் கூட புதிய இலங்கை அரசு ஒப்புதல் கொடுத்திருப்பது இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தியா வருகை தரும் இலங்கை அதிபர் சிறிசேனவிடம் மத்திய அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்யக் கூடும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications