ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணவும் கொழும்பு பயணமாம்: சொல்வது பாஜகவின் முரளிதரராவ்!
இலங்கைத் தலைநகர் கொழும்பில் கடந்த 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும் ஆசிய நாடுகளின் அரசியல் கட்சிகள் மாநாட்டில் பங்கேற்க பா.ஜ.க சார்பில் முரளிதர் ராவும், அக்கட்சியின் வெளியுறவுப் பிரிவு அமைப்பாளர் விஜய் ஜாலியும் கலந்து கொண்டுள்ளனர்.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய தமது கொழும்பு பயணம் குறித்து முரளிதர் ராவ் கூறியதாவது:
இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று இந்திய பிரதமராக பொறுப்பேற்றவுடனேயே தன்னைச் சந்தித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இலங்கையின் அரசியல் சாசன கட்டமைப்புக்கு உட்பட்ட சமவுரிமை, மதிப்பு, நீதி, சுய மரியாதை ஆகியவை கிடைக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இதை இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த நோக்கத்தை வலியுறுத்தும் வகையில், எங்கள் இலங்கைப் பயணத்தை பயன்படுத்தி வருகிறோம். கொழும்பில் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸையும் இதே நோக்குடன்தான் நாங்கள் சந்தித்துப் பேசினோம்.
இதைத் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் மேலும் சில நாட்கள் தங்கியிருந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளோம்.