பட்ஜெட்டுக்கு பிறகு தான் மகளிருக்கு ரூ.2,500.. குட்டையை குழப்பும் தவெக.. நிர்மல் குமார் பகீர்
மதுரை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துவிட்டது. ஒருவாரத்தில் ஏராளமான சர்ச்சைகள் தவெகவை வட்டமடிக்கின்றன. தேர்தல் அறிக்கையின்படி மகளிர் உரிமை தொகையை உயர்த்தி வழங்காதது, அதிமுகவில் ஒரு பிரிவினரை அமைச்சரவையில் இணைப்பது, ஜோதிடருக்கு அரசுப்பதவி என்று கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. 9 அமைச்சர்கள் பதவியேற்று ஒரு வாரமாகியும் அவர்களுக்கான இலாகா ஒதுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் மகளிர் உரிமை தொகை ரூ.2,500 வழங்கப்படுவது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் சொல்லியுள்ள கருத்து சர்ச்சையாகியுள்ளது.
மதுரையில் தவெக அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தவெக ஆட்சியேற்ற பிறகு இப்போது தான் பணிகளை தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு பணியாக ஆய்வு செய்து வருகிறோம். மதுரையை பொறுத்தவரை கழிவுநீர் கால்வாய் இல்லாதது பிரச்சனையாக உள்ளது. இங்கு கழிவுநீர் கால்வாய் உடனடியாக தேவை. அதில் கவனம் செலுத்தி பணியாற்றுவோம்.

அது மட்டுமல்லாமல் எந்தெந்த பகுதியில் மக்கள் என்ன தேவை என்று சொன்னார்களோ அவற்றையெல்லாம் படிப்படியாக நிறைவேற்றுவோம். மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம். வருகிற நிதிநிலை அறிக்கையில் தான் அறிவிக்க முடியும். அதற்கான நிதி ஆதாரங்களை பார்த்துவிட்டு அறிவிப்போம், அதற்கான கால அவகாசம் வேண்டும் என்று முதலமைச்சர் சொல்லியுள்ளார். பட்ஜெட் முடிந்து நிதிநிலை அறிக்கை பார்த்துவிட்டு தான் சொல்ல முடியும்.
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டோம். நாங்கள் 120 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் கவர்னரிடம் மனு அளித்தோம். சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 140க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரளித்துள்ளனர். இது மக்கள் அளித்த தீர்ப்பு. அதற்கு ஆதரவாக நாம் நிற்க வேண்டும் என்று கூடுதலாக தவெக ஆட்சியை சிலர் ஆதரித்துள்ளனர். ஒட்டு மொத்த தமிழக மக்களும் மாற்றத்தை விரும்பி அளித்துள்ள தீர்ப்பை மற்ற கட்சிகளும் வரவேற்றுள்ளனர்.
இந்த ஆட்சிக்கு எதுவும் ஆகாது. தமிழக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை யாராலும் மாற்ற முடியாது. யாராலும் எதுவும் செய்ய முடியாது. மக்களின் எதிர்பார்ப்பை முதலமைச்சர் நிறைவேற்றுவார். கடந்த ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களும் தொடரும். கடந்த திமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் ரூ.400 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. அதில் நிறைய விசாரிக்கப்படாமல் உள்ளது. மக்கள் பணம் திருடப்பட்டுள்ளது. இவற்றை விசாரிக்க வேண்டும்.
பட்ஜெட்டுக்கு பிறகு தான் புதிய பணிகளை செய்ய முடியும். அதுவரை ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதிக்கான பணிகள் தான் நடைபெறும். விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. சீரமைக்கப்பட வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது. ஊழல் இல்லாமல் தடுக்க வேண்டிய முன்னெடுப்பில் முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார். அரசுத்துறையில் லீக்கேஜ் உள்ள இடங்களை சரி செய்யும் பணிகளில் தவெக அரசு ஈடுபடும் "என்றார்.












Click it and Unblock the Notifications