இனவெறியை தூண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் பெயரில் டூப்ளிகேட் அறிக்கை- மகிந்த ராஜபக்சே சதி?
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள இனவெறியைத் தூண்டிவிடும் வகையில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பெயரில் ஒரு டூப்ளிகேட் போர்க் குற்ற அறிக்கையை வெளியிட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே 'சகாக்கள்' திட்டமிட்டுள்ளதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 17-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் படுதோல்வியை சந்தித்து அரசியலை விட்டு ஒதுங்கியிருந்த மகிந்த ராஜபக்சே எப்படியும் பிரதமராகிவிடுவது என களத்தில் இறங்கியுள்ளார்.

ஆனால் ராஜபக்சே மீண்டும் அரசியலுக்கு வருவதை அதிபர் மைத்ரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ஆனால் மகிந்த ராஜபக்சே எப்படியும் ஒரு கை பார்த்துவிடுவது என தீவிரமாக இருக்கிறார்.
அவரது தேர்தல் பிரசார குழு தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சே செயல்பட்டு வருகிறார். சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான அனைத்து வியூகங்களையும் கோத்தபாய தலைமையிலான டீம் வகுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இலங்கை ராணுவத்துக்கு கடும் தண்டனையை அறிவிக்கும் வகையிலான ஒரு அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் ஆணையத்தின் பெயரில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம். அதுவும் மகிந்த ராஜபக்சே போட்டியிடும் குருநாகல் மாவட்டம் சிங்கள ராணுவ அதிகாரிகள் அதிகம் உள்ள பகுதி.
இத்தகைய அறிக்கை ஒன்றை வெளியானால் சிங்கள மக்களிடையே கடும் கோபம் ஏற்பட்டு இனவெறியால் மகிந்த ராஜபக்சேவுக்கு வாக்குகள் அதிகம் கிடைக்கும் என்பது அவர்களது வியூகம். ராஜபக்சேவின் சகாக்களின் இந்த சதிச் செயல் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications